Saturday 11 November 2017

ஆற்றுக்குத் திரும்பிய மீன்










 இந்த மீனை எப்படிப் பிடித்தாய்?'
'நீங்கள் தூண்டிலை இரவல் தந்தீர்கள். மீன் தானாக விழுந்தது'
' முதன் முறையிலே மீன் விழும் ரகசியம் என்ன?'
' மீனின் ரகசியத்தை ஆற்றிடம் தான் கேட்கவேண்டும்'
' மீன் விழும் என நீ எப்படி நம்பினாய்'
' விழும் என்றும், விழாதென்றும் நான் நம்பவே இல்லை'
' தக்கையின் சலனம் எப்படிப் பிடிபட்டது'
' நீரின் பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தேன்'
' மீனைக் குடுவையில் போட்டுவிட்டாயா?'
' அப்போதே அது ஆற்றுக்குத் திரும்பிவிட்டதே'


%

வில்லியம் சரோயன் என்கிற பெயரை முதன் முதலில் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மூலமாக அறிந்தேன். சரோயன் என்கிற பின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. நிறைய வெவ்வேறு - வாசிப்புத் தொடர்பற்ற - தனிமைகளில் ‘வில்லியம் சரோயன்’ என்று குடும்ப நபரைக் கூப்பிடும் குரலில்
சொல்லிப் பார்த்திருக்கிறேன்..
இப்போது தான் வில்லியம் சரோயன் கதைகளை வாசிக்க வாய்த்தது. இவ்வளவு தூரம் வந்த பின் வாசிக்க வேண்டிய கதைகளே அவை.
நண்பர் பாவண்ணன் தான் ‘ என் பெயர் ஆரம்’ என்ற தொகுப்பைக் கொடுத்தார். வில்லியம் சரோயனின் 14 கதைகள். 2005 டிசம்பரில் ’அகல்’ வெளியிட்டு இருக்கிறது. பஷீர் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழினி வசந்தகுமாருக்கு வடிவமைப்புச் செய்து தரும் பஷீராகத்தான் இருக்கும். முகவரியும் தமிழினியுடையதே.
30.06.1940 என்று வில்லியம் சரோயன் அவருடைய முன்னுரையில் தேதியிட்டு இருக்கிறார்.எங்கோ ஒரு தூர தேச அடுக்ககத்தின் ஐந்தாம் தளத் தனிமையில் 11.11.2017ல் வாசிக்கும் ஒருவனிடம் ஓர் அகரம் மாறாமல் அப்படியே அந்த ஆரம் எனும் பெயருடையவனின் உலகும் வாழ்வும் வந்து சேர்கின்றன.
அழகிய வெண் புரவியுடன் ஒரு கோடைக்காலம்,
மாதுளை மரங்கள், ஒரு அருமையான பழைய பாணிக் காதல், மாதா கோவில் பாடகர்கள், சர்க்கஸ், மூன்று நீச்சல்காரர்களும் யேல் நகர மளிகை வியாபாரியும்,லோகோமோட்டிவ் 36, ஓஜிப்வே எனும் அற்புதக் கதைகளால், நெருக்கமான மொழி பெயர்ப்பால் நான் நிரம்பியிருக்கிறேன்.
அப்படி ஒரு நிரம்பிய மன நிலையின் இடையே, ‘என் பெயர் ஆரம். வாசித்து முடித்துத் ததும்பிய வெளியில் தான், ;இந்த மீனை எப்படிப் பிடித்தாய்?’ என்ற வரிகளில் துவங்கும் பதிவை எழுதினேன். ‘மூன்று நீச்சல்காரர்களும் யேல் நகர மளிகை வியாபாரியும்’ கதையை வாசித்துக்கொண்டு இருக்கும் போதே, அந்த மீனும் ஆறும் தெரிந்துவிட்டது.
புழுவைப் பற்றிக் கேட்டிருக்கும் நல்ல நண்பரே,
தூண்டிலில் விழுந்தும் ஆற்றுக்குத் திரும்புகிற மீனுக்குப் புழு எல்லாம் வேண்டியதில்லை. முள்ளில் செருகப்பட்டிருக்கும் தூண்டில் காரனையே அது விரும்பி வருகிறது.

LikeShow More Reactions
Comment

No comments:

Post a Comment