Thursday 26 March 2015

இப்போதும்






ஏப்ரல் கூட இன்னும் பிறக்கவில்லை..

அதற்குள்ளா முழுப் பரீட்சை லீவு விட்டுவிட்டார்கள்?

எங்கே பார்த்தாலும் தாத்தா பாட்டிகள், பேரன் பேத்திகளின் தென்படல். வழக்கமாக நடைவரும் ஒரு தாத்தாவுடன் புதிதாக ஒரு பேரனும் பேத்தியும். தாத்தா ஒரு சிறு பையனைப் போல,ஒரு முருங்கை இலைக் கொத்தைச் சுழற்றிக்கொண்டே வருகிறார். நுனியில் முருங்கை மொட்டும் பூவும் அப்படிச் சிலிர்க்கின்றன.

பைக்கில் மீன் வாங்க வந்து இறங்குகிற தாத்தாவுடன் பேரன் இறங்குகிறான். மீனைத் தொட்டுப் பார்த்து, வழுவழுப்பு உணர்ந்த விரலைக் கூச்சத்துடன் உதறுகிறான். விரல் நுனியில் இருந்து எந்தக் கடலோ புனித ஜோஸஃப் தெரு முனையில் தெறித்து விழுகிறது.

பொதுவாக[,  இந்தப் பேரப் பிள்ளைகள் மைதானத்திற்கு வருவதில்லை என்று நினைப்பேன்.  அதுவும் நேற்றுத் தப்பிவிட்டது. பெயர் கூடச் சொல்லத் தெரியவில்லை. ‘ GOD’S GIFT ‘  என்று எழுதப்பட்ட ஒரு குட்டிக்காரின் ஓட்டுநர் பக்கக் கதவு திறந்து ஒரு பாட்டி இறங்கிச் சாவியை உருவுகிறார்.  இரண்டு பத்து வயதுச் சிறுமிகள்  கையில் வலை மட்டையுடன் பின்னிருக்கையிலிருந்து.  ஒரு சர்வ தேசப் போட்டியில் கலந்துகொள்ள அணிந்தது போல உடைகளின் கச்சிதம். அந்தக் காலணி வகையை இந்த ‘கல் தோன்றி மண் தோன்றா’க் காலத்துச் செம்மண் இதுவரை பார்த்தே இராது.

தென்றல் நகரில் இருந்து பாரதி நகர் வீதிக்குத் திரும்புகிற வளைவில் , அக்காக் குருவிக்குத் திருப்பிக் கூவி, ஒரு தாத்தா தன் முதியோர் ஊதிய விலாவில் சிறகுகள் அணிய, அவருடைய குரல் பறக்கும் திசையில் பேத்திக் குருவி லயித்திருந்தது.

அந்த வாகை மரமும் 'பனைச் செல்வம்' குட்டி லாரியும் அதியரசனின் வியாபாரமும் என்ன சாதாரணமா? குவிந்து கிடக்கும் இள நீரும், நுங்கும் பதநீர்ப் பானையும் தாத்தாக்களையும் பேரன் பேத்திகளையும் வேறொரு அதிசய உலகத்திற்கு அழைக்கிறது.

பச்சைப் பட்டையை ஏந்தி, பதநீர் குடிக்கும் தாத்தா, ஏற்கனவே இருந்ததை விட அழகாகிவிட்டது போலப் பேத்திக்குத் தெரிகிறது.  ‘எனக்கு, எனக்கு’ எனக் காலைச் சுரண்டுகிறது. தான் குடித்த பட்டையைக் குனிந்து அந்தக் குருவிக் குஞ்சின் உதடுகளுக்குக் கொண்டு போகிறார். ஒரு சிறு மடக்குக் குடித்துவிட்டு நிமிர்கிறது. ‘நல்லா இருக்கா?’ – தாத்தா கேட்கிறார்.  

நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை  என்று தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாத அந்த ருசியின் முதல் சுவைப்பில் திளைக்கிற, தத்தளிக்கிற சிறுமியின் முகம் ஆரத்தியாகக் கங்கையில் விட்ட அகல் போல ஒளிர்கிறது.

‘நீ, குடிக்கையா?’ – தாத்தா பக்கத்தில் இருக்கிற சின்னப் பேத்தியிடம் கேட்கிறார். அது தலையை அசைக்கிறது. வேண்டாமாம்.

‘நுங்கு திங்கியா?’ – தாத்தா கேட்கிறார். இரண்டு கைகளையும் பின்னால் வைத்துக்கொண்டு ‘வேண்டாம்’ என்று தலையை மட்டும் அசைக்கிறது.

’ஏன்? பிடிக்கலையா?’ – தாத்தா முகம் பட்டையில் கவிழ்கிறது.

‘தின்னு பாக்கவே இலலையே நீ’ – பதநீர் குடித்து முடித்தாயிற்று.

தாத்தா பட்டையை நெரித்துத் தூரப் போடுகிறார். அது அவர் எறிய நினைத்த தூரம் போகவில்லை. குனிந்து, ஒரு ஆதாரத்திற்கு சின்னப் பேத்தியின் தோளில் ‘பூப் போல’ கையை ஊன்றி, அதை எடுத்து மறுபடியும் சுவர் ஓரமாகப் போடுகிறார்.

‘அது என்ன, என்னமோ கையில வச்சிருக்கே?’ -  தாத்தா கேள்வி சிரிக்கிறது. இப்போதும் பதில் தலையாட்டல் மட்டும் தான்.
‘காட்டு’ – என்று கொஞ்சுகிறார். ’கையில என்னமோ வச்சிருக்கா, குட்டி’  என்று அதன் அக்காவிடம் சொல்கிறார். அக்காக்காரி, ‘ என்னது வச்சிருக்கே. காட்டு பாப்போம்’  என்று கையெட்டுகிறாள். சின்னது பிடிபடாமல் சற்றுப் பின்னால் நகர்கிறது.

அக்காவுக்கு, தாத்தாவுக்கு, எனக்கு, அங்கு பத்நீர் குடிக்க, நுங்கு வாங்க வந்த எல்லோர்க்கும், இந்த உலகத்துக்கே காட்டுகிற மாதிரி, ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னால் வைத்திருந்த கைகளை விலக்கி, வலது கையை மட்டும் நீட்டியது.

வலது கை விரல்களுக்கு இடையில், சற்று அளவில் பெரிய, ஒரு வண்ணத்துப் பூச்சி இருந்தது. கருப்பு நிறம். ஒரு வேளை சிவப்பு அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளதாக இருக்கலாம்.

‘எங்க பிடிச்சே?’ என்ற அக்காவின் கேள்விக்கு அது பதில் சொல்லவில்லை. முகமே பதிலாக இருந்தது. உலகக் கோப்பையை உயர்த்திப் பிடிப்பது போல, கருப்பு வண்ணத்துப் பூச்சி அடங்கிய வலது கையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அப்படியே நீட்டியிருந்தது.

அதனுடைய அக்காவை விட, தாத்தாவை விட, அதியரசன் வியாபாரம் செய்ய நிழல் தரும் அந்த வாகை மரத்தையும் விட, அந்தக் கை உயரத்தில் இருந்தது.

நான் இப்போதும் அந்த உயரத்திலேயே இருக்கிறேன்.


Monday 23 March 2015

ட்ராட்ஸ்கி மருது, குணா அமுதன் மற்றும் நான்.





அவர்கள் இருவரும் இருக்கும் அந்தப் படம் ஆர்.சி.மதிராஜின் பதிவாகவே வெளியாகி இருந்தது. மதி நல்ல புகைப்படக்காரர். அவர் எடுத்திருக்கக் கூடும் ஒன்றாகவே அதை நினைத்து அவருக்குப் பாராட்டுச் சொன்னேன். அது தான் எடுத்தது அல்ல என்றும், அதை எடுத்தவருக்கு என் பாராட்டுகளைச் சேர்த்துவிடுவதாகவும் அவர் பின்னூட்டினார்.

நான் அந்தப் படத்தை மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்தப் படத்தில் இருக்கும் ஆண், பெண் , நான் அறிந்திருக்கும் அவர்களின் சொந்தச் சாயல்கள் எல்லாம் அகன்று, பனிப் படிவு போல, திருநீறு போல, ஒரு வித வெள்ளை அல்லது வெளிச்சம் அந்தப் படத்தில் படர்ந்துகொண்டிருந்தது. நான் இந்த வெளிச்சத்தை மட்டும் ஆழ்ந்து உணர்கையில், நான் பார்த்திருக்கும் இதே வெளிச்சம் நிரம்பிய வேறு சில படங்கள் நினைவுக்கு வந்தன. எடை இயந்திரங்கள் வீசுகிற எடை அட்டைகள் போல, சட்டென்று அந்தப் பெயர் எனக்குள் ஒலித்தது.  ‘ குணா அமுதன் ‘. துளியும் சந்தேகமே இல்லை, அது குணா அமுதன் எடுத்தது தான்.

குணா அமுதனை நான் சென்ற மதுரை புத்தகத் திருவிழாவில் பார்த்திருக்கிறேன். செல்வம் ராமசாமி எங்களைச் சில படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தார். அங்கே வந்த குணாவை முகமறிய வாய்த்தது. செல்வம் தானும் எங்களுடன் நின்று கொண்டு குணாவை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். எடுத்துத் தரச் சொன்னதற்காக குணா எடுத்தார். அவருக்காகத் தோன்றி எடுக்கவில்லை. குணா எடுத்த, நானும் இருந்த, அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். இதுவரை குணாவின் கண்களில் நான் அந்தப் படத்தில் எப்படிப் பதிந்தேன் என்று தெரியவே முடியவில்லை.

சிற்பிகள், ஓவியர்கள், படம் எடுப்பவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கும். இவர்களைச் செதுக்கு, இவர்களை வரை, இவர்களை எடு என்று அவர்கள் மனம் அவர்களிடம் ஓதும். மதிராஜ் பதிந்திருக்கும் அந்தப் படம் குணா ஒரு உள்ளுணர்வின் கீழ்ப்படிதலில், கட்டவிழ்ப்பில் எடுத்தது. அதில் ஒரு சொல்ல முடியாத மருதா நதிக்கரை நீர்மை இருக்கிறது. கல் மண்டபம் ஒன்றில் என்னை தேனி ஈஸ்வர் எடுத்த படத்தில் என் மீது தாமிரபரணி ஓடிக்கொண்டு இருந்தது. அந்த அகலச் சிரிப்பு என்னுடையதல்ல. நதியினுடையது. அதே போல , அத்தனை இலைகளும் வெயிலில் புரண்டு மினுங்கும் ஒரு தூரத்து அரசமரம் இருக்கிற வெளியில் எடுக்கப் பட்ட படத்தின் முகத்தில் பாடும் ஒரு காற்றை உணரமுடியும். பாலைவனத்தின் மணல் படிவுகள் கானலில் புரள, ஒரு பேரீச்சை நிழலில் நம்மைப் படம் எடுத்தாலும் , வெயிலில் துடிக்கும் கன்னங்கரிய  பாம்புகளின் நெளிந்த ஊர்தல் நம் முகத்தில் தெரியாமல் போகாது.

ஓவியர்கள் நிழலைப் பின் தொடர்ந்து தங்கள் ஓவியத்துள் நுழைகிறார்கள். நிழல்களின் வாசல்களை அவர்கள் திறக்க முடிகிறவர்கள். அதே போல தேனி ஈஸ்வர், குணா அமுதன் போன்ற காமெரா கலைஞர்கள் எல்லாம்  தங்கள் வசம் ஒளியின் மாயத் திறவுகோல்களை வைத்திருக்கிறார்கள். இசைக் குறிப்புகள் எழுதுவது போல, தன் சுருங்கி நிதானிக்கும் கண்ணுக்கும் அழுத்தி விடுவிக்கும் சுட்டுவிரலுக்கும் இடைப்பட்ட சிறு பொழுதில். தான் எடுக்கப் போகும் முகங்களின் மேல் . தங்களைச் சுற்றி இருக்கும் வெளிச்சத்தினை ஒரு கை அல்லது ஒரு துளி அள்ளிப் பூசி விடுகிறார்கள். எல்லோரும், ‘காடுடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளங் கவர் கள்வன்’  முகத்தர் ஆகிவிடுகிறார்கள்.

குணா அமுதன் மட்டும் அல்ல , ட்ராட்ஸ்கி மருதுவும் வரைய என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. Photogenic  போல, sculptogenic, paintogenic என்ற சொற்கள் உண்டா தெரியவில்லை. அகராதியில் இல்லாவிட்டாலும் கலைஞர்களிடம் அவர்களுக்கே அவர்களுக்கான கலைச் சொற்கள் உண்டு. ”மருது என்னை வரைய மாட்டீர்களா?’ என்று கெஞ்சினாலும் அவர் வரைய மாட்டார். அவரை வரையச் சொல்லும் ஒன்று என்னிடம் இல்லை. அது இளைய பாரதியிடம் இருந்தது. இளைய பாரதியை மருது அற்புதமான கோட்டோவியமாக எழுதி இருக்கிறார்.

எனக்கும் ஓரளவுக்கு நிழல் தெரியும். ஓரளவுக்கு வெளிச்சம் தெரியும். குணா அமுதன் அவருக்குப் பிடித்தவரைப் படம் எடுக்கிறார். மருது அவருக்குப் பிடித்தவரை வரைகிறார். நான் மட்டும் என்ன?, எனக்குப் பிடித்ததைத் தானே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

%

(முக நூலில் அவர் பக்கத்தைப் பார்த்தேன். அவரை ‘ குணா அமுதன் ‘ என்று அழைப்பதை விட, ‘இரா. குண. அமுதன்’ என்று அழைப்பதே இயல்பாகவும் சரியாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

காலையில் இருந்தே ஒரு அடர்ந்த மன எழுச்சியில் , ‘ குணா, குணா ‘ என்றே அவரை அழைத்துப் பழகிவிட்டது. அத்தனை நெருக்கமாகிவிட்ட 
‘ குணா அமுதன் ‘ ஆகவே எனக்கு அவர் இருக்கட்டும்.).





Thursday 19 March 2015

மெல்லினம்.






எங்கள் சென்னைக் காலம் நீண்ட ஒன்றில்லை. மூன்று வருடங்களுக்குச் சற்றுக் கூடுதல். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள். ஆனால், நிறைய மனிதருடன், நிறைய உயிர்ப்புடன், நிறையப் படைப்புகளுடன் வாழ்க்கை அடர்ந்து பரந்திருந்த, பறந்திருந்த பருவம் அது.

அறிவுமதி அவருடைய  ‘கடைசி மழைத் துளி’ தொகுப்புக்கு என்னையும் எழுதித் தரச் சொன்னார். நான் ‘மெல்லினம்’ என்ற வகையில் இந்த வரிகளை எழுதினேன். முதலில் எழுதி முடித்துக் கொடுத்ததை வாசித்த அறிவுமதி, ‘ அண்ணே நல்லா வந்திருக்கு ‘ண்ணே. ஆனால் கொஞ்சம் நம்பிக்கையோடு முடிகிற மாதிரி இருந்தா இன்னும்  நல்லா இருக்கும்’ என்று சொன்னார். அறிவுமதி சரியாகத்தான் எதையும் சொல்வார். ‘ஆனாலும்’ என்று துவங்கும் அந்தக் கடைசிப் பகுதியை மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இப்போது மொத்தமாக மீண்டும் வாசிக்கையில் அதனுடைய செறிவு முன்னிலும் கூடியிருந்தது.

நான் வழக்கம் போல, அந்த வரிகளைப் பத்திரப் படுத்தவில்லை. அல்லது பத்திரமாக இருக்கட்டும் என எங்கோ வைத்துவிட்டேன். பத்திரமாக  எங்கோ இருந்தாலும், வேண்டிய சமயத்தில் கிடைக்காதது, தொலைந்து போனவை பட்டியலில் தானே  வரும். இரண்டு வருடங்களுக்கு முன் ,  அகநி மு.முருகேஷ் அதன் ஒளியச்சு நகலை அனுப்பிவைத்தார். அதையும் எங்கோ வைத்துவிட்டேன். இப்போது சிவராஜ் அதை மீட்டெடுத்து அச்சாக்கி என்னிடம் தந்திருக்கிறார். இங்கே ஊருக்கு வந்ததும், அது நம்மாழ்வார் அய்யாவுக்கு சிவராஜால் வாசித்துக் காட்டப்பட்டது என்ற உணர்வு நிலையில், மீண்டும் வாசித்தேன். நான் எழுதியது தான். எனக்கே ரொம்பப் பிடித்தது இந்த முறை.

கடலூர் சுவாமிநாதன் ராஜாமணி  கேட்டுக்கொண்டு இருக்கிறார் இதைப் பதிவிடச் சொல்லி. கிட்டத் தட்ட, இரண்டு அல்லது மூன்று சொற்களே ஒரு வரியாக,  முன்னூறு வரிகளாவது இருக்கும்  இதை வாசிக்கும் அவகாசம் முகப் புத்தக ஓட்டத்தில் இருக்கும்  மிகச் சிலருக்கே வாய்க்கக் கூடும்.  ஆனால் சுவாமிநாதன் கேட்டார், நான் இசைந்தேன். இங்கே ‘சமவெளி’யில் பதிவிடுகிறேன்.  இதோ அவர் வாசிக்க நான் கேட்கத் துவங்குகிறேன். அல்லது  அவரை முன்வைத்து, நான் வாசிக்க நானே கேட்கிறேன்.

%


மிகப் பழைய கேள்விதான்
மிகப் புதிய கேள்வி.
சூரியன் பார்த்தது
சமீபத்தில் எப்போது?
*
பறவைகள் அடையும்
பெரு மரம் எங்கிருக்கிறது?
இருள் பரவு முன்
கேட்ட கடைசிக் குரல்
எந்தப் பறவையினுடையது?
*
தந்திக் கம்பிகளில்
தண்ணீர்ப் பாம்புத்தொங்கல்.
கொன்று எறிந்தது யார்
ஆட்கொண்டானா, வேலுவா,
சின்னச் சங்கரனா?
*
புளியங்குடிக்குப்
போகிறவழியில்
பூத்திருக்கிறது நாகதாளி.
*
மணல்வீடு கட்ட ஆற்றில்
மண் உண்டா இப்போது?
வண்டலை அறியுமா
உன் வாய்க்கால்?
*
நுங்குக் கண்ணில்
பெருவிரல் புதையல்.
எந்தச் சூளைக்கு
விறகாயிற்று உன்
தாத்தாவின் பனங்காடு?
*
தூண்டில் முள் வாங்கியது
பத்தமடை சாய்பு கடையில்.
பிடித்தது ராலின்ஸன் ஜோ,
பாலு மாமா, நீ.
ஜிலேபி மீன்களின் சந்ததி
இன்னும் இருக்குமா
பேட்டைக் குளத்தில்?
*
தச்சநல்லூர் ஓடையில்
தாழம்புதர் இருக்கிறதா இப்போது?
களக்காட்டு முந்திரித் தோப்புக்கு அப்புறம்
கண்ணுக்குத் தெரியுமா
தேங்காய் உருளி அருவி?
*
செப்பறைத் தேரிலும் படியும்
சிமெண்ட் ஆலைப் புழுதி.
*
விளிம்பு வரை
பூசணிப்பூவின் மஞ்சள் கிண்ணத்தில்
போக்குவரத்துப் புகை.
சியர்ஸ்.
*
கிளியுண்ணப் பழம் உண்டா ஆலில்?
பழமுண்ணக் கிளி உண்டா ஊரில்.?
*
நகரத்தில் தூக்கம் வராதவர்கள்
கீரிப் பிள்ளைகள் பார்க்கட்டும்.
கிராமத்தில் தூங்குகிறவர்களை
அணில் பிள்ளை எழுப்பட்டும்.
*
காற்றுக் காலம்
காத்துக்கொண்டு இரு.
தென்னந்தோப்பில்
கீற்றுச் சலார் என்று விழும்.
கேள்.
*
பார்வை இல்லாவிட்டால் கூடப்
பரவாயில்லை.
வாழையைத் தொட்டுப் பார்.
பக்கக் கன்றுகளிடம் படித்துக் கொள்.
கிழங்கில் இருந்து வழங்கு பரம்பரை.
*
மழைக் காலத்திலும்
இனப் படுகொலைகள்.
குப்புறக் கிடக்கிறது உடம்பு.
கொப்புளத்தின் நிறம் சிவப்பு.
*
வீட்டுக்குள் வந்து தவிக்கிறது
வெட்டுக் கிளி.
மரங்களில் நெளிகிறது
பச்சைப் பாம்பு.
சுவரோரம் இழுத்துச் செல்லப்படுவது
வண்ணத்துப் பூச்சியின் சிறகு.
*
கடலில் எண்ணெய்க் கசிவு.
ஆலாப் பறவைகளின்
வழுவழுத்த சடலங்கள்.
அநாகரிகத்தின் கடற்கரை.
*
ஆமை நீந்துகிறதா என்று
எட்டிப் பார்த்தேன்.
நகராட்சிப் பூங்காக் கிணற்றில்
தெளிந்த தண்ணீரில்
மிதந்துகொண்டு இருந்தது
நகரசுத்தித் தொழிலாளி வீட்டுப்
பெண் உடல்.
*
சாலக்குடி அருவி பார்க்க.
சண்பகா தேவி அருவி சாக.
*
பொதிகை மலையில்
யானைகள் திரிய.
புனலூர் கள்ளுக் கடையில்
மனிதர்கள் நிறைய.
*
காளான் நிழலில்
கழியுமா காலம்?
*
சிட்டுக் குருவிச்
சிறகையாவது
சேர்த்து வை.
*
விதையற்ற மாதுளை
விதையற்ற திராட்சை
விதையற்ற கொய்யா
விதையுள்ள மனிதன்.
*
குப்புற நட்டாலும்
நேராக வளர்.
*
காற்றால், நீரால்,
பறவையால் பரவுக.
*
ஊற்றைத் தோண்டத் தோண்ட,
காற்றைத் தீண்டத் தீண்ட.
*
நனைந்து செல்ல,
நினைத்துக் கொள்ள
ஒவ்வொருவருக்கும்
ஒருவொரு மழை.
*
உழவுக் காளைக்
கழுத்துப் புண்ணிலும்
உதிர்ந்து கிடக்கிறது
வேப்பம் பூ.
*
பாலை வனம் பார்.
பாறையுடன் இரு.
*
சோற்றுக் கற்றாழைக்குச்
சொந்தமா புகைவண்டி?
*
மூங்கில் புதரை வரைந்தவன்
முழுக் கலைஞன்.
*
யாளி இல்லாக்
கோயில் மண்டபம்
பாழ்.
*
பச்சைக் குளம்
கருப்பு மீன்கள்
வெள்ளைப் பொரி
கொள்ளைப் பசி.
*
ஊர்ந்து கொண்டே
மேகம் இருக்க,
தீர்ந்தும் தீராமல்
தாகம் எடுக்க.
*
ஒரே ஒரு இரவு
பார்த்த நட்சத்திரங்கள்
தூங்க விடவில்லை
நிறைய இரவுகள்.
*
தொட்டிச் செடி வளர்த்ததில்
துயரம் வளர்ந்தது.
நட்ட விதை வளர்கையில்
நானே வளர்ந்தேன்.
*
அவசரம் அவசரமாக
ஆயிரம் சிமெண்ட் பெஞ்சுகள்.
வந்துகொண்டு இருக்கிறார்கள்
வயோதிகத் தனிமையர்.
*
திருப்பாவைப் பாடல்களின்
கிழிந்த குரல்களை
கழிவுக் காகிதங்களுடன்
பொறுக்குகிறவளுக்கு
வயது பதிமூணு.
*
காட்டாமணக்குச் செடி மறைவில்
அமர்கிறார்கள் பெண்கள்.
தரை அதிர அதிர
ரயில் வருது, வருது.
*
அடி மாடுகள் பற்றி
அவன் எழுதிவிட்டான்
ஏற்கனவே.
*
மண்ணில் இருப்பவன்
வரங்கள் பெற்றவன்.
மாடியில் வசிப்பவன்
பிடுங்கப் பட்டவன்.
*
மின்மினிப் பூச்சி பிடி.
தும்பைப் பூ பறி.
மலையில் தீ அறி.
*
நத்தைக் கூடுகள்
நசுங்கி விடாமல்
இலந்தம் புதர் மேல் நடக்கும்
அகஸ்தியர்பட்டி வெயில்.
*
உதிர்ந்து கிடக்கிற
நாவல் பழங்களில்
ஒட்டிய மண்ணை
ஊதிவிட முடியுமா?
*
வேர், விழுது
ஊர் முழுதும்.
*
பண்ணைகள் வைப்பார்கள்
பறவைப் பண்ணைகள்.
விஞ்ஞானம் பிறப்பிக்கும்
வெள்ளைக் கிளி.
*
பச்சைக் கிளி பறக்கும்
பாலா மடை வயல் மீது.
*
முதலில் தெரியட்டும்
மண்ணில் மண் புழு.
அப்புறம் பார்க்கலாம்
வானம்.
*
மலைகளில் அலை.
வனங்களில் தொலைந்து போ.
சருகில் நட.
சந்திரோதயம் பார்.
*
கடைசி மூச்சிலாவது
காற்றின் வாசம்
தெரிந்தால் போதும்.
*
கடைசி மனிதன்,
கடைசி மழைத் துளி
நினைக்கவே பயங்கரம்.
*
ஆனாலும்
மறுபடி மறுபடி ஆறு பெருகும்.
மழை பேசும்.
கொத்துக் கொத்தாகப் பூக்கும்
வண்ணத்துப் பூச்சி.
புறாக்களின் சதவிகிதம் அதிகரிக்கும்.
புல் சிரிக்கும்.
ஆழமாகக் கடல் நிறையும்.
அகலமாக வானம் விரியும்.
சோளக் கொண்டைகள்
தினைக்குருவிகள் கனத்தில் அசையும்.
பதுங்கு குழியில் பிறந்த சிசுக்கள்
பௌர்ணமி வெளிச்சத்தில்
தாய்ப்பால் அருந்தும்.
எல்லா விதைகளையும் மண் தூண்டும்.
எல்லா மண்ணையும் விதை தூண்டும்.
வெள்ளிக் கொலுசுகள்
தொலையும், கிடைக்கும்.
வளையல்கள் வாயாடும்
கடைசி வரை.
நான் பாடுவேன்.
முதியோர் தூங்குவர்.
கண் தெரியாத இசைஞனின்
நசுங்காத புல்லாங் குழலில் வழியும்
துயரம் நிறைந்த மதுமதி சங்கீதம்.
பெண்ணே தன்னைப்
பெரிதாய்ச் செதுக்குவாள்.
ஏழு நாட்களும்
வாழ்வான் தமிழன்.
இருண்ட காடுகள் வகிர்ந்துகொண்டு
பிளந்து இறங்கும்
சூரிய ரேகைகள்.
ஒன்றாய்க் கூடி மேகம் திரளும்
ஊருக்கெல்லாம் பெய்யும் பெரு மழை.
மழையின் துளிகளில்
நனைந்த கவிதை
மறுநாள் வெயிலில்
வரிகளை உலர்த்தும்.
உலர்ந்து போகாத ஈரத்துடனே
உலகம் இருக்கும்.
மனிதர்கள் இருப்பர்.

%















Tuesday 17 March 2015

நீல கண்டம்.








ஞாயிற்றுக் கிழமை கோவையில் இருந்தேன்.

ரவீந்திரன் சார் பையன் பிரபுவுடைய திருமண வரவேற்பு.  கொடீசியா ஹால் ரவீந்திரனுடைய மனசு மாதிரியே ரொம்பப் பெருசு. கொஞ்சம் சீக்கிரமாகவே போய்விட்டோம். சொல்லப் போனால் 12 மணி நிகழ்வுக்கு பத்தே முக்காலுக்கே போவது ரொம்பவே முந்தி.

அப்படிப் போனது ஒரு வகைக்கு நல்லது. ரவீந்திரன் சாரைத் தனியாகப் பார்த்துக் கல்யாணம் விசாரிக்க முடிந்தது. அவர் செல் பேசியில் தன் வியட்னாமிய மருமகளைக் காட்டி, ரொம்ப சந்தோஷமாக மருமகளை, மருமகள் தாயார், குடும்பம் பற்றி எல்லாம் பேசிய போது, அவருடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே நிற்க முடிந்தது. இது வேறு ரவீந்திரன். இந்த ரவீந்திரனை இதற்கு முன் பார்த்ததே இல்லை.

ரவீந்திரனைப் பார்க்கும் போது மட்டும் அல்ல, ஒவ்வொருவராக எல்லோரையும் பார்க்கப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இசைக் கவி ரமணன் (மீசையைக் கொஞ்சம் இப்போது முறுக்கி விட்டிருக்கிறார்), கிருஷியும் அவர் நண்பர்களும், சாம்ராஜ்-சரோ, இளைய நிலா ஜான் சுந்தர் (இன்னும் மழித்தலை நீட்டவில்லை), அன்று புதிதாய்ப் பிறந்திருந்த ஓவியர் ஜீவானந்தம் ( நான் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவர் கையைப் பிடிக்கும் போது, ‘நாஞ்சில் எங்கே காணோம்? என்று ஜீவா தேடிக்கொண்டு இருந்தார்), விஜயா வேலாயுதம் அண்ணாச்சி (மனுஷர் அப்படியே, அதே சிரித்த முகத்தோடு)  என்று பார்த்து, கையைப் பிடித்து, தோளைத் தொட்டுக் கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் ஓலைக் கிலுக்கு இரண்டை என் முன்னால் நீட்டிய படி சிவராஜ் வந்து நின்று சிரித்தார். ஆமாம் அதே, குக்கூ குழந்தைகள் வெளி, வானகம், இயல் வாகை  சிவராஜ் தான். கையில் ஒரு பச்சைத் துணிப் பை இருந்தது.. அதில் அச்சடிக்கப்பட்டிருந்த வரிகளைக் காட்டினார். அது இஸ்ஸாவுடையது. பாரம்பரிய காய்கறி விதைகள் அடங்கிய ஒரு காகிதப் பையில் என் வரியொன்று இருந்தது. ’மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்’ என்று அச்சடிக்கப் பட்ட புத்தகத்தில்  கவிஞர் அறிவுமதியின் ‘கடைசி மழைத்துளி’ தொகுப்பில் இடம் பெற்றிருந்த என்னுடைய ‘மெல்லினம்’ கவிதையை முழுதாக இணைத்திருப்பதாகச் சொன்னார். படங்கள் எடுத்துக்கொண்டோம். முகத்தோடு முகம் வைத்து மிக நெகிழ்வாக ஒரு படம் உண்டு. யாராவது அதைக் காட்டினால் நன்றாக இருக்கும். நான் அரக்குச் சிவப்பும் கருப்புக் கோடுகளுமாய் ஒரு புது குர்தா வேறு போட்டு வேட்டி கட்டியிருந்தேன்.

ஒரு இரண்டு நிமிஷம் உங்களோடு தனியாகப் பேசணும்என்றார். அவ்வளவு நேரமும் சந்தோஷமாக இருந்த அவர் முகமும் கண்களும் கலங்கி இருந்தன. சற்றுத் தள்ளிப் போய் அமர்ந்தோம். நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டேன். சிவராஜ் அவரும் நம்மாழ்வார் அய்யாவுமாக இருந்த நாட்களைப் பற்றிச் சொன்னார். என் இந்தக் கவிதையை வாசித்துக் காட்டிய நேரம் பற்றி அவர் நினைவு கூர்கையில் ஒரு அறுவடைத் தானிய அம்பாரம் போல இருந்த அவர் முகம் சரியத் துவங்கியது. மிகச் சிரமமான அவருடைய ஒரு காலத்தை, அவருடைய தாயாரைப் பற்றிச் சொல்கையில் அவர் பெருங்குரலில் அழத் துவங்கி, மறு நொடியில் நஞ்சுண்டு அமைவது போல அந்த அழுகையை அவர் விழுங்கினார். விழுங்க முடியாமல் அழுகை அவர் கண்டத்தில் இருந்தது. கையை நொறுக்கிப் பிடித்து ‘ ஊருக்கு வாங்க சிவராஜ்’ என்றேன். ‘சரி; என்று சொல்ல முடியவில்லை அவரால். தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து போனார்.

சாப்பாடு எல்லாம் முடிந்து வெளியே வரும் போது, தாம்பூலப் பைக்குப் பதிலாக, விதைகள், புத்தகம், ஓலைக் கிலுக்கு எல்லாம் அடங்கிய அந்தப் பச்சைப் பையை சிவராஜ் முன்னால் நின்று எல்லோர் கையிலும் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் சகாக்கள் பின்னால் நின்று ஒழுங்குபடுத்தி உதவிக் கொண்டு இருந்தார்கள்.

‘ எனக்கு ரெண்டு பை கொடுங்க’ என்று நான் அவர் ,முதுகுப் பக்கம் நின்றுகொண்டு சிவராஜ் தோளில் கையை வைத்தேன். திரும்பிப் பார்த்த சிவராஜ் முகம் முழுக்கச் சிரித்தார். கையைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டார். மிகவும் மெலிந்த வெதுவெதுப்பான அந்தக் கைகளால் நான் எங்கோ விதைக்கப்படுவது போல இருந்தது.

நான் தற்செயலாக அவர் கழுத்தைப் பார்த்தேன். அந்த அழுகை இன்னும் விழுங்கப் படாமல் சிவராஜின் கண்டத்திலேயே இருந்தது.





Saturday 7 March 2015

வாசனை நிரம்பிய தினம்.




இந்த தினம் அவருடன் துவங்கியது. இந்த தினத்தை அவரே துவங்கிவைத்தார்.

கல்வெட்டாங்குழிப் பக்கம் அதிகாலையில் இப்படி ஒருவரை இதுவரை பார்க்க வாய்த்தது இல்லை. பொதுவாக, இந்த ஊரில் தங்கிக் கட்டிடவேலை பார்க்கிறவர்கள் ‘ கால் கழுவ ‘ கல்வெட்டாங்குழித் தண்ணீருக்குள் இறங்குவார்கள்.

அப்போதுதான் உதிர்ந்த ஒரு சிவப்பு வாதாம் இலையின் பளபளப்புடன் காவி உடையில் அவர் இருந்தார். இப்படி நெஞ்சுக்குக் கீழே இறங்குகிற வெள்ளைத் தாடியுடன் யாரைப் பார்த்தாலும் எனக்கு மேலக்கோபுர வாசலில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு உட்கார்ந்திருந்த அமாவாசைச் சாமியார் ஞாபகம், அதுவும் ‘சேவல் கொடி மார்க்’ சோப் வாசனையுடன் வந்துவிடும். ஜெயகாந்தனின் ஓங்கூர் சாமியார், விசிறிச் சாமியார், வேதாத்ரி மகரிஷி யாரைப் பார்த்தாலும் அமாவாசைச் சாமியார்தான்  எனக்கு. ஒருத்தரைப் பார்தால் எல்லோர் மாதிரியே இருப்பதும், எல்லோராகவும் ஒருவரே ஆகிவிடுவதுதானே சாமிய நிலை. எல்லோராகவும் இருப்பது என்பது, யாரோ ஒருவராக மட்டும் இருப்பதைத் துறப்பதுவே அல்லவா.

மடியில் ஒரு வெண்கல சேகண்டி இருந்தது. அதை மீட்டும் குச்சியும். ஒரு பெரிய வெண் சங்கு மடியில். கல் சுவர் ஒன்றில் ஒரு கால் மடித்து முதுகுத் தண்டு கோணாமல் உட்கார்ந்திருந்தார். அமர்வதற்கான ஆதாரம் எதுவும் இன்றி, ஒரு அந்தரமான பீடத்தில் இருப்பதான தோற்றம் அது. அவர் என்னைப் பார்க்கவில்லை. மேய்ந்துகொண்டிருந்த புறாக்களைப் பார்க்கவில்லை. எதையும் பார்க்கவில்லை. அல்லது அவர் என்னைப் பார்த்தார். புறாக்களைப் பார்த்தார். எல்லாவற்றையும் பார்த்தார்.

அவரைத் தாண்டிப் போனேன். எனக்கென்னவோ, இப்போது அவரைத் திரும்பிப் பார்த்தால் அவர் காணாமல் போயிருப்பார்  என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தேன். மெய்யாகவே அவர் காணாமல் போயிருந்தார். கண்டவர்கள் காணாமல் போகிறார்கள். தோன்றியவர் மறைந்துவிடுகிறார்கள். அடைந்தவர்கள் தொலைந்துவிடுகிறார்கள். அவர் தொலைந்து, மறைந்து, காணாமல் போயிருந்தார். அவரைப் பார்த்த காட்சி மட்டும், வழியில் கிடக்கும் ஒரு வாதாம் பழம் போல, என் பாதையில் கடிபட்டுக் கிடந்தது.

நான் யுவன் சந்திரசேகரின் சமீபத்திய ‘மர்மக்கதை’யில் வருகிற சடையனை நினைத்துக் கொண்டேன். தானகவே, உதிர்ந்த மலர் காம்பில் ஒட்டுவதாக, சடையனின் நினைவு அந்தப் புள்ளியில் குவிந்தது. ஒரு குமிழி திரள்வது போல, ஒரு மொக்கு மலர்வது போல சடையன் தன் மூன்றடித் தோற்றத்துடன் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சாமியார் கூட, சடையன் தான் என்று  தோன்றியது.

கர்நூலில் இருந்து கரட்டுப்பட்டிக்கு வரமுடிகிற சடையனுக்கு, இந்தப் பெருமாள்புரம் சிதம்பரம் நகருக்கு வருவது பெரிய விஷயமா? மூணே முக்கால் நாழிகை கூட ஆகாது. சடையன் தான் அது. சடையனே தான். சடையனே வந்திருக்கிறான். வானத்து அமரன் வந்தான் காண். வந்தது போல் போனான் காண்.

இப்படிச் சித்தம் போக்கில், ‘காடாக, செடியாக’ ஒரு ஐம்பது நிமிடங்கள் எங்கெங்கோ திரிந்துவிட்டு, வேர்க்க , அக்காக் குருவி கத்த, விறுவிறுத்து நடக்கிறேன். வழியில் யானை மணி. தை மாதக் கரும்பு இரண்டை மாசி மாதக் கடைசியில் யார் வீட்டிலோ நீட்டுகிறார்கள். யானை தும்பிக்கை சுருட்டிக் கரும்பை ஏந்தி, கரும்பாளம் போலத் தன் உடலை எதிர் வீட்டுக்குத் திருப்புகையில், மறுபடி மணி அடித்து, ஒலி சிதறி, தெரு மறைந்து, வனம் ஆகி, திக்குத் தொலைகிறது.

நான் நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டேன். யானையைத் தூரத்தில் விட்டுவிட்டு மணிச் சத்தம் நான்கு கால்களில் என்னைத் துரத்துகிறது. நான் பிடிபடாமல் தப்பித்துச் செல்கிறேன்.  என் தப்பித்தலின் கயிற்றுத் தொங்கலில் இட வல மணிகளின் கிண்கிணார்.

எதிரே மகளிர் கல்லூரிப் பக்கம், களக்காட்டு மலையில் தீ எரிவது போல, ஒரு காவி நிற விசிறல். மலை மறைந்து, தீ நிறைந்து, எனக்கு முன்னிருக்கிற தூரத்தைக் கைச் சொடுக்கில் அப்புறப் படுத்திவிட்டு, அவர் வேக வேகமாக வருகிறார். இப்போது காவி வேட்டியைத் துண்டு போல இரட்டைத் தட்டாக மடித்து, முழங்காலுக்கு மேல் கட்டியிருக்கிறார். ஒரு நீர்ப்பறவை போல நீண்ட மெல்லிய கால்கள். அவரிடமிருந்து உலர்ந்து வரும் ஈரத்தில் காற்று குளிர்கிறது. இடது கை இடுக்கில் பாம்பு வழவழப்புடன் ஒரு நீண்ட கோல். மடங்கின இடது முழங்கையில் சேகண்டித் தொங்கல். சேகண்டி வட்டத்தின் மையப் பளபளப்பு, நெற்றிக்கண் போல இமை திறந்து என்னைப் பார்த்துவிட்டு, இமை மூடிக் கொள்கிறது.

சங்கு எங்கே என்று தேடுகிறேன். மடியில் ஒரு பனிப்பந்து போல பெரிய வடிவில் அப்போது கிடந்த அந்த வெண்சங்கு, இப்போது அவருடைய இடது உள்ளங் கைக்குள்  ஒரு வெண் தாமரை மொக்குப் போல அடங்கியிருக்கிறது. அவரின் மொத்த உருவமும் அகன்று விட, வெள்ளைத் தாமரை மொட்டுப் போல இருக்கிற சங்கை மட்டும் பார்க்கிறேன்.

சங்கு உடைந்திருக்கிறதோ என்று பதறுகிறது. இல்லை. கீற்றுப் போல ஒரு இளம் செம்மை விளிம்புடன் அந்தத் தாமரை மொக்கு மலரத் துவங்கி இருக்கிறது. முதல் இதழ் மட்டும் தன் நுனிக் காது மடங்க, என்னுடைய திசையில் அவிழ்ந்துகொண்டு இருந்தது.

இதை எழுதி முடிக்கும் இன்னேரம் வாசனையே இல்லாத ஒரு வாசனை 
கமழ்கிறது. தன் தீரா இதழ்கள்  அனைத்தையும் அது மலர்த்திவிட்டது போலும்.

எத்தனை வாசனை நிரம்பிய தினம் இது.