Tuesday 25 November 2014

தருகிறவர்கள், பெறுகிறவர்கள்.








தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அது வேறு ஒரு காட்சியாக இருந்தது.

மழைப் புல் மேயும் பசுவின் முதுகில் உண்ணி பொறுக்கும் நாரை. பக்கவாட்டில் சாய்த்து நிறுத்தப்பட்ட ஒரு கனத்த பைக். முப்பதடிகள் தள்ளி, புல் இதழ்களின் விளிம்பில் இருந்து துவங்கும் செம்மண்  பாதையில் அந்தப் பெண். ஒரு  கவனமான ஐந்தடி இடைவெளிக்கு அப்பால் அவர்.

அந்தப் பெண்ணுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். திருமண வருடங்கள் தெரியும் வாகும் தோற்றமும். எளிய அன்றாட உடைகள் தான். ஒருவேளை, சுரிதார் நிறத்தில், துப்பட்டா அடர்வில் இந்தச் சந்திப்பிற்கான தேர்வுகள் இருந்திருக்கலாம்.

அவருக்கு நாற்பது வயது  நெருங்கியதாக அல்லது சற்று முன் விடிந்த இந்த அதிகாலையில் தாண்டியதாக. நல்ல கருப்பு. நல்ல உயரம். வரிகள் இட்ட டீ ஷர்ட்.  இடுப்பில் நேர்த்தியான இளம் நிற வளைவுகளின் மேல் அழுத்தமான கருநீலம் பரவிய ஒரு கைலி. தோலில் விறைப்பான அதிகாரம் இருந்தது. ஒரு சீருடையைக் கழற்றிவைத்துவிட்டு வந்திருப்பது தெரிந்தது. ஆனால் அந்த நெகிழ்வான புன்னகை முற்றிலும்   ஒரு மனிதனுடையது. கனிந்த அந்த பிரத்யேகமான கண்கள் ஒரு பிரியம் நிரம்பிய ஆணினுடையது.

அவர் தாழ்ந்த குரலில் இயல்பாகவும், அந்தப்  பெண் வலப்புறம் திரும்பிச் சற்று உரக்கவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  நான் அவர்களைத் தாண்டும் போது, அந்த ஆணின் கண்களைச் சந்திக்காத, வேறு யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று நிதானித்துக் கொள்கிற தோற்ற த்துடன், “தங்கச்சி க்கு எல்லாம் கல்யாணம் ஆயிட்டுது. எல்லாரும் வேலைக்குப் போயிட்டாங்க. நான் ஒருத்திதான் சும்மா இருக்கேன்” என்று அந்தப் பெண், நான் வரும் திசையில் காற்றிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். சொல்வது என்று தீர்மானித்துவிட்டால், எதிரே நிற்கும் ஒருவரிடம் மட்டுமல்ல, என்னிடமும் இந்த உலகத்திடமுமே எப்போதும் பெண்கள் சொல்லிவிட விரும்புகிறார்கள்.

அந்த ஆணின் கையில் ஒரு அவுரிப்  பூங்கொத்து இருந்தது. பூ மட்டும் அல்ல. உருண்டை உருண்டையான  மொக்குகள், நான்கைந்து இலைகளுடன் கூடிய கொத்து அது. நான் கவனித்திருக்கிறேன். ஒரு ரோஜாவை, ஒரு அடுக்கு மல்லிப் பூவைப் பறிக்கச் சொன்னால், பெரும்பாலான ஆண்கள் அந்தப் பூவை மட்டுமே பறிக்கிறார்கள். பெண்கள் அனேகமாக, இரண்டு இலைகளுடன், நீளக் காம்புடன் சேர்த்தே பறிக்கிறார்கள். அவர்களுக்கு இலை தேவையாக இருக்கிறது. காம்பு தேவையாக இருக்கிறது.

அது அந்தப் பெண் அவரிடம் பறித்துக்கொடுத்ததாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்க நான் விரும்புகிறேன். அப்படி விரும்பியபடியே, அவர்கள் இருவரையும் தாண்டி நடக்கிறேன். ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கடக்கும் வரை, இடது பக்கம் பூராவும் அவுரி வனம். கொத்துக் கொத்தாகப் பொன்மஞ்சள் பூக்கள்.

யார் பறித்து யாரிடம் தரப் போகிறார்களோ?
இலைகளோடு அல்லது இலைகள் இன்றி, யார் தந்து , யார் பெற்றுக்கொள்ளப் போகிறார்களோ?

Sunday 16 November 2014

என்னவோ செய்யும் உணர்வு







மூக்க முதலியார், கருத்த முதலியார் இரண்டு பேரிடமும் தான் அம்மாச்சி சேலைகள் எடுப்பாள்.( சேலை வாங்குவது  என்று சொல்ல மாட்டார்கள். சேலை எடுப்பது என்று சொல்வார்கள்.). மூக்க முதலியார், கருத்த முதலியார் இரண்டு பேருமே கட்டையாகத்தான் இருப்பார்கள். வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து காட்டுவார்கள். அவர்களே தறிக்குழியில் உட்கார்ந்து அவர்களே நெசவு செய்து கொண்டுவரும் நூல் சேலைகள்.

 ஆச்சி சேலை எடுக்கும் போது நான் பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். எனக்கு சேலைகளில் இருந்து வரும் சாய வாசனையும் கஞ்சி வாசனையும் பிடிக்கும். பேரம் பேசுவார்கள் தான், பேரம் சுருக்கமாக இருக்கும். ‘இருந்தாங்குடியா எல்லாரும் பேசி வச்ச மாதிரி ஒரேயடியா சொல்லுதீங்க. மூக்க முதலியார் யானை விக்கிறதுக்கு ஆரம்பிச்சது தெரியாமல் போச்சே’. என்று ஆச்சி ஏதாவது சொல்வாள்.

 ‘ஆச்சி  வாக்கு பொன்னா இருக்கட்டும். மூக்க முதலி அப்படியானை விக்கிற காலம் வந்தால், சத்தங் காட்டாமல் வந்து, இந்த நடுவீட்டுக் கல்தூணில விடிய முந்திக் கெட்டிவச்சுட்டுப் போயிரமாட்டேன். உலகத்துல பைசாவா முக்கியம்.?’ என்று அவர் ஏதாவது சொல்லியிருப்பார். ஆச்சி இரண்டு எடுக்க நினைத்தவர், கூடுதலாக ஒரு சேலை எடுத்துக்கொள்வார்.

அப்போது எனக்கு ஆறு ஏழு வயது இருக்கும். வேம்படித் தெருவா, நடுத் தெருவா, பெரிய தெருவா தெரியவில்லை. ஏதோ ஒரு அம்மன் கோவிலில் தீக்குழி இறங்குகிறதைப் பார்க்க அம்மாச்சி என்னைக் கூட்டிக்கொண்டு போயிருந்தாள். முதல் முதல் பார்த்த அந்த தீக்குழிக் கங்கு இன்னும் ஒரு கனல்பாய் போல என் முன் இன்னும் கிடக்கிறது. சரி. சாமி கும்பிட்டு ஆயிற்று. வலது உள்ளங்கையில் வாங்கின திருநீறை இடது கைக்கு மாற்றி, அம்மாச்சி எனக்குத் திருநீறு பூசிவிட்டாள். தேங்காய்ப் பூ வாங்கிக்கொடுத்தாளா இல்லையா என்பது அயத்துப் போயிற்று. வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

ஆச்சி நேராக வீட்டுக்கு வரவில்லை. முடுக்கு முடுக்காக எங்கேயோ கூட்டிக்கொண்டு போனாள்.  ஒரு பூவரச மரம் நின்றது ஞாபகம் இருக்கிறது. ஒரு கறிக்கடையைக் கூடத் தாண்டிப் போனோம். ‘எங்க ஆச்சி போறோம்?’ என்று கேட்டாலும் ஆச்சி சொல்லவில்லை.’வா’ என்று மட்டும் கொஞ்சம் கழித்துச் சொன்னாள். ஒரு வீட்டின் முன் நின்றாள்.

‘முதலியார் இல்லையா?’ என்று சத்தம் கொடுத்தாள்.  முதலியார் இல்லை. வெளியே போயிருந்தார், அந்த வீட்டுப் ’பொம்பிளையாள்’ தான் வந்தார். ஆச்சியைத் தெரியும் போல. ‘தீக்குழி பார்க்க வந்தோம்’ என்று ஆச்சி சிரித்துக்கொண்டே நடையேறினாள். நான் வெளியே நின்றேன். பெயர்ந்து செங்கல் தெரிந்த நடை எனக்குப் பிடித்திருந்தது.
‘உள்ளே வா, முருகா; என்று ஆச்சி சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை அண்ணாந்து குடித்துக்கொண்டே சொன்னாள்

’எத்தனை வருஷம் முதலியார் எங்க வீட்டுக்கு நல்லது கெட்டதுக்கு வந்து போயிக்கிட்டு இருக்காரு. உங்க வீடு போற வாற பாதையில தான் இருக்குண்ணு தெரியும்.  இதுக்குண்ணு எடுத்துக் கூட்டி வராட்டாலும், வாய்க்கும் போது எட்டிப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு. . இப்படி யாரையாவது ஒருத்தரை ஒருத்தர்  அப்பப்ப பார்த்துக்கிட்டா நல்லாத்தானே இருக்கு’, அம்மாச்சி தன் கையால் அந்த வீட்டுச் சின்னப் பெண்குழந்தை நெற்றியில் பூசினாள்.

எனக்கு இப்போது உள்ளே போகத் தோன்றிற்று.
நான் பார்த்த முதல் தறி அங்கே இருந்தது. அதன் மரச் சட்டங்கள், அதில் பாதி நெசவில் இருந்த ஒரு ரோஸ் நிறச் சேலையின் நூல் இழைகள் என்னை என்னவோ செய்தன.

அந்த ’என்னவோ செய்த’  உணர்வு இன்றும் என்னிடம் அப்படியே இருக்கிறது. என்னவோ செய்யும் உணர்வால் தான் இதை எழுதுகிறேன். இதை மட்டுமல்ல, எதை எழுதவும் காரணமாக இருப்பது அந்த என்னவோ செய்யும் உணர்வுதான்.


Sunday 2 November 2014

கெட்டி மேளம்







நான் கிடைத்த இடத்தில் உட்கார்கிறவன்.

அந்தக் கால திரையரங்குகளில், தலைக்கு மேல் மின் விசிறி இருக்கிற இடமாகப் பார்த்து உட்கார்கிறவர்கள் உண்டு. அவர்களே போல்வர் இப்போது கல்யாண வீடுகளில் வசதியான உறவினர்கள், அல்லது நெருக்கமானவர்கள் இருக்கிற இடத்தைப் பார்த்து உட்கார்கிறார்கள். அது ஒரு வகைத் தேர்ந்தெடுப்பு தான். நான் மனிதர்களைத் தேர்வதில்லை. நான் நடக்கும் போது காலியாக இருக்கும் இருக்கைகளில் உட்கார்கிறேன். பக்கத்து நாற்காலியில் யார் இருப்பினும் சரி.

இன்றும் கூட அப்படித்தான். ஆனால் இடப்பக்கத்தில் இருந்த மூன்று பேரும் தெரிந்தவர்கள் தான். கொஞ்ச நேரம் இந்தக் கல்யாணத்தில் இருந்துகொண்டு, கலந்துகொள்ளமுடியாத லட்சுமி சரவணகுமார்     கல்யாணத்தை நினைத்துக் கொண்டு இருந்தேன். திருமங்கலம் தன் வழக்கமான தூரத்தை விட அதிக தூரத்திற்குப் போய்விட்டது போலவும், எழுத்து வழி அடைந்திருந்த வழக்கமான  நெருக்கத்தை விட,  லட்சுமி சரவணகுமார் அதிக நெருக்கத்தையும் அடைந்துவிட்டது போலவும் இருந்தது.

அப்படியே எல்லாவற்றையும் எல்லோரையும் பார்த்துக்கொண்டே இருந்தேன். புகைப் படம் எடுக்கிற, வீடியோ பதிவிடுகிற  வீரபாகு எனக்கு  ஏற்கனவே தெரிந்தவர். ஒரு புகைப்படக்காரர் இயங்கும் நேரத்தில் அவரைக் கவனிப்பது எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் வாசலில் விளையாடுவதை,  உங்கள் நண்பர் வீட்டு வரவேற்பறையில் நீங்கள் இருக்கையில், அந்த வீட்டில் இயல்பாக நடமாடுகிற ஒரு பெண்ணை அல்லது முதியவரைக் கவனிப்பது போல அது.

எனக்கு முந்திய வரிசைக்கும் முந்திய வரிசையில், தூண் ஓரத்தில் அந்தப் பதின்வயதுப் பெண் உட்கார்ந்திருந்தார். இடவலமாக, மேல் கீழாக முகத்தை ஒரு கடிகார நொடி முள் போல நகர்த்தியபடி சிரித்துக் கொண்டே இருந்தார். யாரைப் பார்த்து? எல்லோரையும் பார்த்து. எதை நோக்கி? எல்லோரையும் நோக்கி. அப்படி ஒரு சிரிப்பு. எல்லாவற்றுடனும் இருந்து, எல்லாவற்றையும் தாண்டிய சிரிப்பு. சித்தப் பிசகு என்பதே சித்த ஒருமை அல்லவா. அவர் சிரிப்பில் ஒன்றிப் போய் சிரிப்பாகவே ஆகியிருந்தார்.

இன்னொருவர் எனக்கு முந்திய வரிசையில் வந்து உட்கார்ந்தார். அவர் என்று சொன்னால் நன்றாக இல்லை. அந்த ஆச்சி என்றுதான் சொல்ல வேண்டும். எழுபத்தைந்துக்கு மேல் இருக்கும். வீட்டையா இல்லை என்று பார்த்தாலே தெரிகிறது போல வெள்ளைச் சட்டை. நெற்றியில் அள்ளிப் பூசிய திருநீறு. கழுத்தில் இரண்டு மூன்று ஸ்படிக மாலை, வெள்ளியில் கோர்த்த உத்திராட்சம்.

ஆச்சி தானாக  உட்காரவில்லை. அவளைப்பார்த்ததும் ஆளாளுக்கு எழுந்திருந்து  அவள் கையைப் பிடித்து, ‘இங்க உக்காரு, இங்க உக்காரு’ என்று ஏக உபச்சாரம் செய்கிறார்கள். ஆச்சிக்குக் ‘கொள்ளவில்லை’. அப்படிச் சிரிக்கிறார். அப்போதுதான் முளைத்த விதை போல, ஒரே ஒரு பல் மட்டும் கீழ்ப் பக்கம் இருக்கிறது. மற்ற இடத்தைப் பூராவும் சிரிப்பு நிரப்பியிருக்கிறது. அது சிரிப்பு இல்லை. சந்தோஷம். இந்த வாழ்வில் இருந்து திரட்டித் திரட்டியெடுத்து வைத்து, அவள் எல்லோர்க்கும் விநியோகித்துக் கொண்டிருந்த வாழ்வின் சாரம்.

ஆச்சி ஒருத்தர் கையைப் பிடிக்கிறாள். ஒருத்தர் தோளைப் பிடித்து ,’எம்புட்டு நாளாச்சுய்யா எல்லாரையும் பார்த்து’ என்கிறாள்.  ஒருத்தரைப் பார்ப்பதே அவளுக்கு எல்லோரையும் பார்ப்பது ஆகிவிடுகிறது. ஆண் கிடையாது. பெண் கிடையாது அவள் உலகத்தில். எல்லோர்க்கும் ஒரே கன்னம் . கைவிரல்களைக் குவித்துக் கன்னத்தில் வைத்து, அதற்கு ஒரு  முத்தம். ஒரு நொடி கூட யாரும் ஆச்சியைத் தொடாமல் இல்லை. ஆச்சியும் ஒருத்தர் பாக்கிவைக்காமல் தொடுகிறாள். சிரிக்கிறாள். விசாரிக்கிறாள். மறுபடி சிரிக்கிறாள். மறுபடி முத்துகிறாள். ஒரு பல் சிரிப்பில் உலகம் சுழல்கிறது.

நானும் பின்னால் தான் இருக்கிறேன். எனக்கும் கன்னம் இருக்கிறது. ஒரே ஒரு தடவை , என்னைக் கிள்ளி ஆச்சி முத்திக் கொள்ள மாட்டாளா என்று இருக்கிறது. நான் ஆச்சிக்கு முன் வரிசையில் சிரித்துக்கொண்டிருந்த அந்த சித்தம் மலர்ந்த  பெண்ணைத் தேடுகிறேன். இந்தச் சிரிப்பு அந்தச் சிரிப்பைத் தொலைத்துவிட்டது.  நிஜமாகவே அந்தப் பெண்ணைக் காணோம். அது இருந்த இடத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள்.

எனக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பெண் தான் இந்த ஆச்சி. அந்தச் சிரிப்பே இந்தச் சிரிப்பு. அவள்தான் இவளாக இருக்கிறாள். நான் இப்படிக் கிறுக்குத் தனமாக  நினைக்கையில்,  ஆச்சி யார் கையைப் பிடித்துக்கொண்டோ அப்படிச் சிரிக்கிறாள்.  ஆச்சி சிரிக்கும் போது, சொல்லிவைத்தது போல கெட்டிமேளச் சத்தம் கேட்கிறது.

தாலி கட்டுவதற்கு மட்டும் தானா, ஆச்சியின் இந்த சிரிப்புக்குக் கெட்டி மேளம் வாசிக்கக் கூடாதா என்ன?