Thursday 23 October 2014

அகஸ்தியம்.












இன்றைக்கு பௌர்ணமியா?
நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்து கிடந்தது. சின்னத் துண்டு மேகம் கூட இல்லை. எட்டுத் திசைகளும் சுத்தமாக இருந்தது. எல்லா இடத்தையும் துடைத்து எடுத்ததால், அப்படியொரு துடிப்புடன், கொதிபால் காம்புச் சூட்டுடன் கறவைச் செம்பில் நுரைத்துக்கொண்டு இருந்தது. நட்சத்திரங்கள் விடுமுறையில் போயிருந்தன.
நேற்றுத் தானே கோவிலில் கூட்டமா கிடந்துது. பிரதோஷத்துக்கு மினி பஸ்காரன் ஸ்பெஷல் கூட விட்டிருந்தானே. அப்போ நாளைக்குத்தானே பௌர்ணமியா இருக்கும்’  தனுஷ்கோடி அண்ணனும் இப்போது நிலாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
தனுஷ்கோடி அண்ணன் முகம் அழகாக இருந்தது. யார் இப்படி நிலாவை ஏறிட்டுப் பார்த்தாலும் அவர்களுடைய முகம் அழகாகிவிடும் போல. சொக்குப் பிள்ளை கடையில் சாப்பிட்டுவிட்டு கைகழுவுகிற இடத்தில்தான் இலையைப் போட வேண்டும். எல்லோரும் அந்த தகர தார் டின்னுக்குள் போடுவதும் இல்லை. அப்படியே போட்டாலும் எல்லா இலையும் உள்ளே விழுவதும் கிடையாது. அப்படி வெளியே விழுந்துகிடந்த இலைகளின் மீது நிலா பளபளத்தது. அருள்ராஜ் கடைக்கு முன் இறக்கிப் போட்டிருந்த காலி ஈய பால்கேன் நிறம் வேறு மாதிரி ஆகிவிட்டிருந்தது.
வேல்சாமி பாண்டியன் இருந்தாம் னா, நிலா இப்படித் துடிச்சுக்கிட்டு கிடக்கிறதைப் பார்த்தால் பாட ஆரம்பிச்சிருவான். ... ஆசையே அலை போலே. நாம் எல்லாம் அதன் மேலே... ‘ – தனுஷ்கோடி அண்ணன் நாக்கு உச்சரிப்பு இன்னும் குளறுகிற மாதிரியேதான் இருந்தது. ‘நீ எப்போ வந்தே குட்டிப் பயலே?என்று காலையில் கட்டிப் பிடிக்கும் போதே சாராய வாடை தாங்கமுடியவில்லை. ‘கல்யாணத்தில் ஆளைக் காணோமேன்னு பார்த்தேன். மறுவீட்டுக்கு வந்து நிக்கே. ஆபீஸில அப்படி என்ன பெருசா கோபுரத்தைக் கட்டி நிமுத்திதியாக்கும்என்று இன்னும் கொஞ்சம் தோளை இறுக்கினான். இப்போது அவ்வளவு உறுதியாக இல்லாவிட்டாலும் தோளைப் பிடித்துக் கொண்டே மேலே பாடுகிறான். ‘.. சூறைக் காற்று மோதினால், தோணி ஓட்டம் மேவுமோ...?
நான் இன்னும் நிலாவையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னை அறியாமலே உள்ளே திருச்சி லோகனாதனின் குரல் அடுத்தடுத்த வரிகளுக்குப் போய் நகர்ந்தபடி இருந்தது. தனுஷ்கோடி அண்ணனையே பார்த்தேன்.
அவன் நாதஸ்வரம் வாசிப்பான். மில் வேலைக்குப் போகிறவரைக்கும் கூட அவனுடைய அப்பாவோடு வாசிக்கிறது உண்டு. அது ஒரு திருவாதிரை தினம். வாசிப்பு முடிந்து அண்ணனுடைய அப்பா போய்விட்டார். நடை அடைத்தாகிவிட்டது. திட்டிவாசல் கதவு மட்டும் திறந்துகிடக்கிறது. நான், அவன், பட்டருடைய மூத்த பையன் ராஜாமணி மூன்று பேருமே மிச்சம்.
‘நடலம் பார்க்கவேண்டாமா நீங்க?’  என்றான். நடனம் என்பதை அவனுடைய அப்பாவும் ‘நடலம்என்றுதான் சொல்வார். வில்வ மரத்தடியில் உட்கார்ந்தான். எங்கள் இரண்டு பேரையும் உட்காரச் சொன்னான். எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.
தனுக்கோடியா அது என்பது போல ஆகிவிட்டது. அரளிச் செடி மூட்டில் இருந்த செம்போத்து படபடவென்று பறக்கிறது. வில்வப் பழம் பொத்தென்று விழுந்து உருள்கிறது. பால்கொச்சை வாசனைக்கு மூஞ்சூறு நடமாடுகிறது போல.  ஓரமாக ஓடுவது அதுவாகத்தான் இருக்கும். பிரகாரத் தளம் எல்லாம் பளபளத்து விம்முகிறது. கல்பாளம் எல்லாம் உருகிக் குளிர்ந்து ஆறாகப் பாய்வது போல இருக்கிறது. வாசிப்பது போதும் அண்ணன் என்று சொல்ல முடியவில்லை. எழுந்திரு என்று அமர்த்த வாய் வரவில்லை.
அவனுக்குக் கண்ணைத் திறக்கவேண்டும் என்று தோன்றியதும் சீவாளியை விட்டு உதட்டை எடுத்தான். கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இருந்தான். எழுந்திருந்தான். பொட்டென்று ஒரு வில்வப்பழத்தைத் தரையில் தட்டி, பிசின்  கம்பியிழுக்க, ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டான். தக்‌ஷிணாமூர்த்தி சன்னதியை விழுந்து கும்பிட்டான். பிள்ளையார் முன்னால் தொங்கும் மணியை அடித்தான். நிருநீறை அள்ளிப் பூசிவிட்டு வாத்தியத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே போய்விட்டான். ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லவில்லை.
அன்றைக்கு நிலவு இப்படி இருந்ததா என ஞாபகம் இல்லை. அவன் வாசிப்பு மாத்திரம் எங்களோடு வெளிச்சமாக வந்துகொண்டு இருந்தது. ராஜாமணியும் நானும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஒருதடவையோ இரண்டு தடவைகளோ பட்டர் மகனுடைய கையில் இருந்த பெரிய திறவுகோல்கள் மோதிச் சத்தம் வந்தது. அது கூட தனுஷ்கோடி அண்ணனின் நாபியில் இருந்து வந்தது போலத்தான் இருந்தது.
அப்போ போய்த்தான் ஆகணும் கிறியா? இனிமே இங்கே காத்துக்கிடந்து பிரயோஜனம் இல்லை. கிடாரங்குளம் விலக்குக்குப் போனால் ஏகப்பட்ட  பஸ் வரும். ஒண்ணு இல்லாவிட்டால் ஒண்ணுல ஏறிப் போயிரலாம். மறுவீட்டுக்கு வந்த ஆட்கள் எல்லாம், மினி பஸ் வரலைண்ணு தெரிஞ்ச உடனே செட் செட்டா அங்கேதான் போயிக்கிட்டு இருக்கு தனுஷ்கோடி அண்ணன் என் முகத்தையும் நிலாவையும் மாறி மாறிப் பார்த்தான்.
தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்கிறவர்களுக்கு இன்னும் கொஞ்சம் குடிக்கவேண்டும் என்று தோன்றும் போது வருகிற பிரத்தியேகக் களை அவனிடம் இருந்தது. ‘என்னமா இருக்கு பாரு நிலா?’  என்றான். ‘முழுங்கிவிட்டுக் கக்கிவிடலாம் போல இருக்குண்ணு எங்க அம்மை சொல்லுவா. அது மாதிரித்தான் இருக்கு தலையைக் குனிந்து கொண்டு கொஞ்ச நேரம் இருந்தவன்,  ‘ ஏற்கனவே தொயந்தாப்பில மூணு நாள் மில்லுக்கு லீவைப் போட்டுட்டேன். நைட் ஷிப்டுக்குப் போகணும் இன்னைக்கு. இல்லாவிட்டால் உன் கூடவே வந்திருவேன்என்றான்.
‘எனக்கு இப்படியே தனியா நடந்து போகணும் போல இருக்கு நான் தனுஷ்கோடி அண்ணனிடம் சொன்னேன்.
‘அது சரி. நிலா, அருவி, வனாந்திரம் எல்லாம் மோகினில்லா. தனியாத்தான் வரச் சொல்லும் அண்ணனின் கண்கள் ஒரு சர்ப்பத்தின் கண்கள் போல மினுங்கின. அவன் தரையோடு தரையாக ஊர்ந்து செல்லத் துவங்கிவிடக் கூடும் என்பது போல, நிலா வெளிச்சத்தில் அவனுடைய திரேகம் நெளிந்து நிமிர்ந்தது. நான் மேற்கொண்டு தனுஷ்கோடி அண்ணனிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. நடக்க ஆரம்பித்தேன்.
பக்கத்தில் எருக்குழி ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ரொம்ப நாட்களாக ஒன்றுக்கு மேல் ஒன்றாகக் கொட்டப்பட்டு வெக்கையில் நீறி வெதுவெதுவென்று சூடாகப் பரவுகிற பசுஞ் சாணியின் வாடை அடித்தது. பட்டாத் தேவர் தொழுவில் எருமைகள்தான் உண்டு. அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். பையன்கள் யாருக்கும் பால்மாடு வைத்திருக்கும் உத்தேசம் இருக்க வாய்ப்பு இல்லை. பட்டாத் தேவர் தன் எருமைகளைப் பத்திக்கொண்டு இப்போது எதிரே வந்தால் நல்லது. எருமைகளின் பிட்டி எலும்பின் மேலும், முதுகு எலும்புக் கண்ணிகளின் லேசான துருத்தலிலும் நிலா வெளிச்சம் வழிந்து வழிந்து தரையில் சிந்தும் எனில் எப்படி இருக்கும்?
பக்கத்தில் மலையொன்றும் இல்லை.  அங்கிருந்து யாரோ உருட்டிவிட்டது போல ஒரு கார் அல்லது வில்வண்டி மட்டும் போகிற அளவுக்கு வழிவிட்டு தெற்கேயும் வடக்கேயுமாக இரண்டு பெரிய பாறைகள் இந்த இடத்தில். செடி முளைக்கிற மாதிரி பாறைகளும் முளைக்குமோ என்னவோ. எண்ணி இரண்டே இரண்டு. பொதுவாக எல்லாப் பாறைகளுக்கும் பக்கத்தில் பெரிது சிறிதாக இன்னும் ஏழெட்டுக் கிடக்குமே அப்படி எதுவும் இல்லை. தென் பக்கத்துப் பாறையில் சுண்ணாம்பு வைத்துப் போட்ட ஒரு பெரிய அம்புக் குறி.  வடபக்கத்தில் ஆளுயரத்திற்குக் கோரை முளைத்துக் கிடந்தது. முன்னால் பஸ்ஸுக்கு நடந்து போகிற யாரோ கை வாக்கில் கிள்ளிவிட்டுப் போயிருக்க வேண்டும். பச்சை வாசம் காற்றில் அடித்தது.
இதைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனால், பாதையை விட்டு உட்பக்கம் நகர்த்திவைத்தது மாதிரி ஒரு கல்மண்டபம். மூட்டம் போட்டு இப்போதுதான் எடுத்த புகையடிப்பு நிறம் . அதற்குப் பின்னால்தான் தாமரைக் குளம். அது குளம் இல்லை. கனடியன் கால் வாய்க்கால். அதே போல தாமரைக்குளம் என்கிற அதன் பெயரும் தப்பு. அங்கே பூத்துக்கிடப்பது தாமரை இல்லை. அல்லிப் பூ. இது மாதிரிக் குறிப்பிட்ட சில இடங்களில் எப்படியோ இப்படி மொத்தமாக, தண்ணீர் இருந்தாலும் வற்றினாலும், அல்லி முளைத்துக் கிடக்கிறது. தண்ணீர் இருக்கிற தடமே தெரியாமல் சிவப்புச் சிவப்பாக, நடுவில் விளையாட்டுக் காட்டுகிற மாதிரி ஒன்றிரண்டு வெள்ளையாகவும்.
பக்கத்தில் வரவர, அல்லித் தண்டின் வழுவழுப்பான வாசனை. ஒரு சிறிய பதற்றம் உண்டாயிற்று.  சாரைப்பாம்பு  போலக் கிடக்கும் இந்த இடத்தைப் பார்க்காமலே போய்விட முடிந்தால் நல்லது. கிழிசலை வெட்டி எறிந்துவிட்டு, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தையல் போடுவது இல்லையா. அது மாதிரி,  இந்த இடத்தை மட்டும் பிட்டுத் தூரப் போட்ட கையோடு, கிடாரங்குளம் விலக்கு வரை போய்விடமுடியாதா? அப்படி நினைக்கிறோமே தவிர, சில சமயங்களில் எதையும் தவிர்க்க முடிகிறது இல்லை. அல்லது எதைத் தவிர்க்க நினைக்கிறோமோ அது முதலில் வந்து நிற்கிறது.
யாரோ பைக்கை நிறுத்திவிட்டு நின்றுகொண்டு இருந்தார்கள். என்னதான் அந்தப் பக்கம் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் , எனக்குள் சிவப்புச் சிவப்பாக மலர்ந்துகொண்டே இருந்தது.  செருப்புக் காலும் சேலையுமாக முன்னால் நகர்ந்து வந்து
‘யாரு, வடிவேல் தானே?’  என்று என்னைக் கேட்பது யார் என்று உடனடியாகப் பிடிபட்டுவிட்டது. அகஸ்தியர் அத்தை நின்றுகொண்டிருந்தாள். அகஸ்தியர் என்பது ஆண்பிள்ளை பெயர் அல்லவா எனக் கேட்கக் கூடாது. அதே போல, அத்தைக்கு அதிகமாகப் போனால் நாற்பது வயது இருக்கும். சரியாகச் சொன்னால் என்னையும் தனுஷ்கோடியையும் விட ஏழு எட்டு வயது பெரியவள். தனுஷ்கோடி அண்ணனுக்கும் அகஸ்தியர் அத்தைக்கும் ரொம்ப நெருக்கம். அவ்வளவு சொன்னால் போதும். அப்படித்தான் அவர்களுக்குள் எல்லாம் இருந்தது. ‘என்ன மாப்பிளை சௌக்கியமா?என்று பைக்கைத் தடவி விட்டுக்கொண்டு இப்போது என் பக்கமாக வந்து கேட்கிற பழனியாண்டி மாமாவும் ரொம்பச் சுருக்கமாகவே அதை எடுத்துக்கொண்டார்.
‘தனுஷ்கோடி போயிட்டுதா? அகஸ்தியர் அத்தை எப்போதும் போல தலை நிறைய மஞ்சள் சிவந்திப் பூ வைத்திருந்தாள். ஒரு சிறிய அரசமரம் போல, அல்லது அரசமரத்தடி நாகர் சிலை என நின்று என்னைக் கேட்டாள். அகஸ்தியர் அத்தை எப்போதும் எல்லோர் காதும் கேட்கும்படியாக தனுஷ்கோடியைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள், பேசுவாள். பெயர் தேவைப்படாத இடத்துக்குப் போன பின், பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம் என்று ஆகிவிட்டது போல.
‘அது இந்தப் பக்கம் கூடி வருகிறதை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சே பழனியாண்டி மாமா என்னையும் பார்க்காமல் அத்தையையும் பார்க்காமல் அவருடைய மோட்டார் பைக்கும் அவரும் பேசிக்கொள்வது போலச் சொன்னார்.
‘எனக்கு அது தெரியாதா என்ன? இருந்தாலும் வடிவேலு கூட பஸ் ஏத்திவிட அப்படியே ஒண்ணா நடந்துவரும்னு தோணுச்சு. இந்த இடத்தைப் பார்த்ததும் நானே இதுக்கு மேலே ஒரு எட்டு எடுத்துவைக்க முடியலை. அதுக்கு எப்படி முடியும்?அகஸ்தியர் அத்தை குளத்தையே பார்த்தாள். அத்தை கையில் மூட்டோடு முழுதாகப் பிடுங்கிய ஒரு வெள்ளை அல்லி பூவும் தண்டுமாக இருந்தது. பழனியாண்டி மாமா என் பக்கமாக நெருங்கி வந்து தோளில் கைவைத்து, ‘நீ அங்கே போய் என்ன பண்ணப் போகிறே?என்பது போலத் தடுத்து என்னை நிறுத்தினார்.
இந்த மூன்று அடிச் சுவர் பஞ்சாயத்து போர்டில் இருந்து இப்போது சமீபத்தில் கட்டியிருக்கிறார்கள். முன்னால் கிடையாது. ஆட்கள் கைகால் கழுவுவது, இறங்கிக் குளிப்பது, துவைப்பது கொள்வது, மாடு குளிப்பாட்டுவது எல்லாம் முன்பு இதுவழியாகத்தான். இறங்கும் போது சரிவாக இருக்கும். ஏறும் போது கொஞ்சம் உன்னி ஏறவேண்டும்.
இருக்கிற இடத்தை எல்லாம் விட்டுவிட்டு தனுஷ்கோடி தங்கச்சி இங்கே வந்து மருந்தைக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டாள். இந்த ஊரில் அப்படி எத்தனை பேர் பத்து பாஸாகி மேல்படிப்புக்கு  டவுண்பஸ் ஏறிப் போயிருக்கிறார்கள்? அது என்னவோ இவளுக்கு மட்டும் பெயிலாகப் போனது அவ்வளவு கேவலமாகப் போய்விட்ட்து. பள்ளிக்கூடத்துக்குப் போகிறது போலவே ஊதாப் பாவாடை, வெள்ளைத் தாவணி, ரெட்டைச் சடை. ரோக்கர் நுரைத்த வாய் கூட சிரிக்கிற மாதிரித்தான் இருந்தது.
அகஸ்தியர் அத்தைதான் கூடவே இருந்தாள். ‘புறவாசலில் வளர்ந்து சாய்ஞ்சுக்கிட்டு நிக்கிற வாழைக்குப் பக்கத்தில, குட்டியா ரெண்டு இலை விட்டுக்கிட்டு பக்கக் கண்ணு இருக்குமே, அது மாதிரி இருக்கு தனுஷ்கோடிஅவளைக் குளிப்பாட்டியதும் இப்படி அழுதாள். வேறு புதுசு கட்டுவதற்காக மறைப்புக்குள் இருந்த அகஸ்தியர் அத்தை, ‘பாவி, பாவிஎன்று வெடித்தாள். ‘இந்த மேனிக்கு ஒரு திரியைப் போட்டு நெய்யை ஊத்திப் பொருத்தி பட்டாசலில் வச்சிரலாம் போல இருக்கேஎன்று ஒப்புச் சொன்னாள். ‘மன்னார் கோயில் விளக்கு. என் கிட்டே ஒரு வார்த்தை யோசனை கேட்காமல் போயிட்டாளேஎன்று கதறிய போது, என்னை விட, தனுஷ்கோடியை விடப் பழனியாண்டி மாமாதான் அதிகம் குலுங்கினார். துண்டை வாயில் சுருட்டிவைத்துக் கொண்டார். சுதாரித்து நிதானம் ஆகி,டைம் ஆச்சு. டைம் ஆச்சுஎன்று எல்லோரையும் முடுக்கிவிட்டதும் அவர்தான்.
‘படிக்க வச்சு, பாட வச்சுக் கெட்டிக்கொடுத்திரணும்னு படாத பாடு எல்லாம் பட்டுக்கிட்டு இருந்தான். அண்ணனா அப்பாவாண்ணு கேட்டால் அண்ணன்னுதான் அன்றைக்கும் இன்றைக்கும் அந்தப் பிள்ளை சொல்லும். கடைசியிலே இப்படிப் புத்தியைக் கடன் கொடுத்துட்டுதே’  பழனியாண்டி மாமா வழக்கத்தை விட அதிகமான போதையில் என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அண்ணன் வீட்டுக்கு வெளியில் வேப்பமரத்தடியில் நார்க்கட்டில் போட்டு உட்கார்ந்திருக்கிறோம். சுடலைகோவில் பக்கத்து ஆலமரத்தில் சமீபத்தில் யாரோ ‘இளங்கொடிகட்டிவிட்டுப் போயிருக்க வேண்டும். காற்றில் வாடை அடித்தது. என்னைப் போலவே மாமாவுக்கும் தெரியும், தனுஷ்கோடி அண்ணனும் அகஸ்தியர் அத்தையும் இதே போல வீட்டுக்குள் ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டும் அழுதுகொண்டும் இருக்கிறார்கள் என்பது. இன்றைக்குத் தோளில் வைத்திருக்கிறது போலத்தான், அன்றைக்கும் அவர் கை என் மேல் இருந்தது.
வாயாய் வார்த்தையாய் அவர் சொல்லுவதை விட, இப்படித் தோளில் கைவைப்பதன் மூலம் அவர் நிறையச் சொல்லிவிடுகிறார். நிறைய இல்லை, எல்லாவற்றையும்.
‘எம்புட்டு நேரம் இங்கேயே நிப்பே? பழனியாண்டி மாமா பைக்கை உதைத்துக்கொண்டே அத்தையைப் பார்த்தார். அத்தைக்கு என்ன தோன்றியதோ, கையில் வைத்திருந்த அல்லிப் பூவைத் தண்டோடு என் கையில் கொடுத்துவிட்டு, பின்பக்கம் ஏறி உட்கார்ந்தாள். ‘தனுக்கோடியைப் பார்த்துக்கோஎன்று சொல்லிவிட்டு, ‘அதைக் கொடு வடிவேலு’  என்று கையை நீட்டினாள். அத்தை என்னிடமிருந்து பூவை வாங்குகிற நேரத்தைத் துல்லியமாக்க் கணித்தது போல, மாமா பைக்கை நகர்த்தினார். அகஸ்தியர் அத்தை பூவும் கையுமாக உட்கார்ந்துகொண்டு சிரித்த சிரிப்பு உருக்கமாக இருந்தது. இந்தச் சிரிப்பை அப்படியே அள்ளிக்கொண்டுபோய் சிந்தாமல் சிதறாமல் தனுஷ்கோடியிடம் சேர்த்துவிட வேண்டும்.
இது எல்லாம் எனக்குப் புரியவே இல்லை. இதுவரை எப்படி அகஸ்தியர் அத்தையுடன் தனுஷ்கோடி அண்ணனுக்கு அத்தனை நெருக்கமாக இருக்க முடிந்தது? நானும் மாமாவும் நார்க்கட்டிலில் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த ராத்திரிக்குப் பிறகு, கதவைச் சாத்தினது போல, அப்படி ஒரு திசையே இல்லாதது மாதிரி எப்படி விலகிவிட முடிந்தது? இவ்வளவு நாளையும் விட, இந்த துக்கம்தானே கதவை அகலமாகத் திறந்துவைக்க வேண்டும்?
தனுஷ்கோடி அண்ணன் அழுததையும் விட அகஸ்தியர் அத்தை ஒப்புச் சொல்லி அழுகிறாள். ‘பாவி, பாவிஎன்கிறாள். மன்னார் கோவில் குத்துவிளக்கு என்று துடிக்கிறாள்.  தன்னுடைய வருத்தத்துக்காக இல்லாவிட்டாலும், அகஸ்தியர் அத்தை வருத்தம் குறைவதற்காகவேனும் அண்ணன் எப்போதும் போல, அல்லது எப்போதையும் விட சகஜமாக அல்லவா இருக்க வேண்டும். எனக்கு இப்படி எல்லாம் தவிப்பாக இருந்ததே தவிர, இதை அண்ணனிடம் சொல்லவோ கேட்கவோ இன்றைக்கு வரை முடியவில்லை. மேலும் இதில் அடுத்தவன் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அவனுக்கே அல்லவா தெரிய வேண்டும்.
பால கிருஷ்ணாவில் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வருகிறேன் அனுமார் கோவில் உள்ப்பக்கத் தென்னை மரத்திலிருந்து ஒரு காய்ந்த முழுத் தோகையும் மட்டையுமாகச் சலார் என்று ரோட்டில் விழுகிறது. விழுந்த வேகத்தில் எழுந்த புழுதி அடங்குவதையே பார்க்கிறேன். தெருவிளக்கு வெளிச்சத்தில் பழனியாண்டி மாமா அவருடைய ஐஸ் கம்பெனிக்குப் பக்கத்தில் பைக்கில் நிற்கிறார்.
உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு நிக்கேன்.என்றார். மாமா ஜிப்பா போட்டு, சுருக்கி மேல் கைப் பக்கம் ஏத்திவிட்டிருந்தது அழகாக இருந்தது. நான் அவர் பக்கத்தில் போனதும், ‘வசூலுக்கு வந்தேன்என்றார். வசூலுக்கு வந்த சமயம் உன்னைத் தற்செயலாகப் பார்த்தேன் என்று அர்த்தம்.
‘அத்தை நல்லா இருக்காங்களா?
என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. ‘நீயாவது உங்க அண்ணன் கிட்டே சொல்லக் கூடாதா? ஏன் இப்படி மாட மடங்கக் குடிக்கணும்?என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். ‘அசத்து மறந்து மெஷினுக்குள்ளே கையைக் கொடுத்திட்டான்னு வச்சுக்கோ. என்ன பண்ண முடியும்?
இதற்கு நேரடியாக நான் எதுவும் சொல்லவில்லை. மாமா பேசுவது எனக்கு அகஸ்தியர் அத்தை பேசுவது போல இருந்தது.
‘நல்ல வேளை கொஞ்சம் முந்துச்சு. ஓலையும் மட்டையும் விழுந்த வேகத்துக்கு என்னமாவது ஆகியிருக்கும்’  என்று வேறு பக்கம் பேச்சைத் திருப்பினேன்.
பழனி மாமா கண் கலங்கியது. என் மேல் கையை வைத்தார். என்னைப் பார்க்கவில்லை. தெருவிளக்கின் அடி உருளையைப் பார்த்தார். ‘அப்போ அவனை வாண்ணு சொன்னேனா? இப்போ அவனை வராதேன்னு சொன்னேனா?என்று எச்சிலை விழுங்கினார். மேற்கொண்டு பேச்சு வரவில்லை. ‘பார்ப்போம்என்று பைக்கைக் கிளப்பினார்.
ஒருபக்கம் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் தென்னை மட்டையை இழுத்துக்கொண்டு யாரோ போனார்கள். யார் என்றே எனக்குத் தெரியவில்லை. ‘சினிமா பார்த்துட்டுப் போகிற பாதையா?என்று கேட்டார்கள். நிறையப் பேருக்குப் பதில் தேவைப்படுவதில்லை.
இப்படிப் பழனியாண்டி மாமா வருத்தப்பட்டதைக் கூட நான் தனுஷ்கோடி அண்ணனிடம் சொல்லவில்லை. இதை மட்டும் அல்ல. அகஸ்தியர் அத்தையை ஒரு தடவை பஸ்ஸில் வைத்துப் பார்த்ததையும் சொல்ல வாய்க்கவில்லை. திருநெல்வேலியில் இருந்து வந்துகொண்டு இருக்கிறேன். அத்தை எங்கே எப்போது ஏறியிருப்பாள் என்று தெரியவில்லை. முன்பக்கத்து சீட் ஒன்றிலிருந்து எழுந்து, மேல் கம்பியையும் பக்கவாட்டு ஓர வளைவையும் மாறிமாறிப் பிடித்தவாறே என்பக்கம் வருகிறாள். கண்ணாடி புதிதாகப் போட்டிருப்பதால் அத்தை மாதிரியும் இருக்கிறது . அத்தை மாதிரியும் இல்லை.
‘என்ன அடையாளம் தெரியலையா?என்று என் பக்கம் உட்கார்ந்துகொண்டே கண்ணாடியைக் கழற்றி,இப்போ தெரியுதா?என்று சிரிக்கிறாள். அகஸ்தியர் அத்தை பக்கத்தில் இதுவரை உட்கார்ந்தது இல்லை.  அத்தை சிரிப்பை ஒரு ஜாண் தூரத்தில் பார்த்தது இல்லை. எனக்கு தனுஷ்கோடி அண்ணனைத் தேடியது.  ‘மாமா வரலையா?என்று கேட்டேன்.
அகஸ்தியர் அத்தை விளக்கம் சொன்னாள்.  இடது கண்ணில் வெடுக் வெடுக்கென்று நாலு நாள் குத்து எடுத்ததாம்.  ஒரு கரண்டியால் நார்த்தங்காய் ஊறுகாயை எடுக்கிற மாதிரி எடுத்துப் போட்டுவிடலாம் என்று இருந்ததாம். கண்ணாஸ்பத்திரியில் காட்டி சொட்டு மருந்து விட்டார்களாம்.  டெஸ்ட் பண்ணி எழுதிக் கொடுத்தார்களாம். கண்ணாடி போட்டுக்கிட்டால் நல்லது என்றார்களாம். போட்டாச்சாம். இப்போது ஒரு தொந்தரவும் இல்லையாம்.
அகஸ்தியர் அத்தைக்குக் கண்ணாடியும் நன்றாக இருந்தது. சிரிப்பும் நன்றாக இருந்தது.
‘டீச்சர் மாதிரி இருக்குஎன்றேன்.
‘சொல்லுததே சொல்லுதே. வக்கீல் மாதிரி டாக்டர் மாதிரின்னு சொல்லவேண்டியது தானே’  என்று மேற்கொண்டும் சிரித்தாள். மறுபடியும் எழுந்து மேல் கம்பியையும் பக்கவாட்டு வளைவையும் பிடித்து முன்பக்கம் போய் உட்கார்ந்துகொண்டாள். ஒரு வார்த்தை கூட தனுஷ்கோடி அண்ணனைப் பற்றிக் கேட்கவே இல்லை. அகஸ்தியர் அத்தையைப் பார்த்தேன். உன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை என்று தனுஷ்கோடி அண்ணனிடம் எப்படிச் சொல்ல?
இப்படி அகஸ்தியர் அத்தை நான்கைந்து சீட் தாண்டி இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார்ந்ததும், என்னுடன் பேசிவிட்டு அண்ணனைப் பற்றி ஒன்றுமே மருந்துக்குக் கூட ஒருவார்த்தை பேசாமல் எழுந்துபோய் மறுபடியும்  அச்சடித்தது போல முன்பக்கம் உட்கார்ந்து கொண்டது மட்டும் புரிந்துவிடுகிறதா என்ன? இன்றைக்கு மாதிரி நல்லது கெட்டது வீடுகளில் பார்த்தால் கூட எப்படி இவர்களால் பேசாமல் இருக்க முடிகிறது?  இவர்கள் பேசுகிறார்களா, பேசுவதில்லையா என மற்றவர்கள் கவனிப்பது இருக்கட்டும். இவர்கள்தான் ஏதாவது இவர்களுக்கு மட்டுமே கேட்கிறமாதிரியாவது பேசிக் கொண்டால்தான் என்ன?
பைக் தான் இப்போது பெருத்துப் போய்விட்டதே. பின்னால் யாரோ வருகிறார்கள். கற்றையாக வெளிச்சம் மேடும் பள்ளமுமாகத் தடவியபடி போகிறது. மண் சுவரோடு சுவராக வைத்து வளர்த்திருந்த சோற்றுக் கற்றாழை பச்சை மடல் மடலாகத் தெரிந்தது. குடிதண்ணீர்க் குழாய் உடைந்து தண்ணீர் பெருகிக் கிடந்தது. மஞ்சணத்திப் பூ வாசனை வந்தது. பம்ப் செட் ஓடி, தொட்டி நிரம்பி நுரைக்கிற் சத்தம். ராமக் கோனார் வயல் கிரயம் பண்ணிக் கைமாறிவிட்ட இடத்தில் வாழை போட்டிருக்கிறார்கள். குலை தள்ளின வாழைப் பூவின் கருநீல மடல் இருட்டைத் துளாவிக்கொண்டு நுனி மடங்கியிருந்த்து.
இப்போது மறுபடியும் இன்னொரு பைக் பக்கத்தில்  காலை ஊன்றி நின்றது. ‘விலக்கு வரைக்கும்தானே. ஏறிக்கிடுதியா? ரைஸ் மில்காரர்  என் தோளைத் தட்டினார். ஏற்கனவே யாரோ பின்னால் இருந்தார்கள். ‘இருக்கட்டும். கொஞ்ச தூரம்தானேஎன்று சிரித்தேன். கொஞ்சம் நிலா வெளிச்சத்தில், கொஞ்சம் இருட்டில் சிரிக்கப் பிடித்திருந்தது. மினுக்கட்டாம் பூச்சி போல வெளிச்சமாக அந்தச் சிரிப்பு இருந்திருக்கும். அகஸ்தியர் அத்தை கொஞ்ச நேரத்திற்கு முன் அல்லிப் பூவைக் கையில் வைத்தபடி புறப்பட்டுப் போகும் போது சிரித்தது மறுபடி தெரிந்தது.
தனியாக நடக்கும் போது ஒரு வேகம் வந்துவிடுகிறது. கருங்கல் ஜல்லியும் கப்பியுமாக பாதை பின்னால் ஓடியது. நிறையப் பேர் நடக்கிற சப்தம் கேட்டது.  எதுவும் யாரும் தெரியாமல் சத்தத்திற்குக் கால்கள் முளைத்து முன்னால் போவதை உணர முடிந்தது. தோளில் கிடக்கிற குழந்தை முனங்குகிறது. சிகரெட் வாசனையுடன், ‘கீழே பார்த்து வாஎன்று ஒருத்தர் எச்சரிக்கைப் படுத்துகிறார். இந்த இருட்டில் கீழ் எது, மேல் எது? புது நார்ப் பெட்டி வாடை, கதலிப் பழ வாடை எல்லாம் தலைக்கு மேல் நகர்கிறது. தொடர்ந்து நிலா வெளிச்சத்தில் கும்பல் கும்பலாக ஊமத்தம் பூ. நேற்றையப் பூவா? நாளையப் பூவா? எல்லாம் தான். நேற்றைக்குப் பார்த்தால் நேற்றையப் பூ. நாளைக்குப் பார்த்தால் நாளையப் பூ.
டயர் பிருபிருவென்று தரையும் மணலுமாகச் சறுக்க, லைட் இல்லாமல் ஒரு சைக்கிள் இடுப்பில் மோதுவது போல் எதிரே வந்து நின்றது. மோதிவிடாமல் தடுப்பதுபோல கையை உயர்த்தியபடி, நிமிர்ந்து பார்த்தால் தனுஷ்கோடி அண்ணன். எனக்குத் திகைப்பாக இருந்தது. எதிர்பார்க்கவில்லை.
‘போயிட்டு வாரேன். தனியா போரேன். அப்படி இப்படின்னு சொல்லிவிட்டுக் கிளம்பினே. இப்படி ஆடி அசைஞ்சு வாரே தனுஷ்கோடி அண்ணன் சிரித்துக் கொண்டேதான் கேட்டான். மேலும் குடித்திருந்தான்.
‘ உன் கூடப் புறப்பட்ட ஆளுக எல்லாம் எப்பவோ பஸ் பிடிச்சுப் போயாச்சு. இன்னேரம் வரை அங்கன நிண்ணுட்டுத்தான் , ஆளைக் காணுமேண்ணு வாரேன் தனுஷ்கோடி அண்ணன் சைக்கிளை விட்டு இறங்கும் போது கொஞ்சம் லம்பியது. முன் பக்கம் சாய்வது போல உடம்பு தடுமாறியது. பிடிக்கப் போவது போல, கையை உயர்த்தினேன்.
‘மில்லுக்குப் போகலையா?’  என் குரலில் கோபம் இருந்தது.
‘எதுக்குப் போகணும்?’   சைக்கிள் சீட்டில் கையைக் குத்தினான்.
‘நைட் ஷிப்டுக்கே போகிறேன்னு  சொன்னே’  இதைச் சொல்லும் போது எனக்கு அகஸ்தியர் அத்தை ஞாபகமும் அவள் கையில் அல்லிப் பூவை வைத்துக்கொண்டு பழனிமாமாவோடு பைக்கில் போனதும் ஞாபகம் வந்தது. இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன்னால், மிஞ்சிப்போனால் அரை மணிக்குள் நடந்தவை எல்லாம் ஞாபகக் கணக்கில் சேர்ந்துவிடுமா?
‘ராஜா மணியை  சாவியை எடுத்துக்கிட்டு வரச் சொல்லு’ -  தனுஷ்கோடி அண்ணன் பக்கத்தில் இருந்துகொண்டு சொன்னான். வேறு எங்கோ தூரத்தில் இருந்து அவன் குரல் கேட்டது. ராஜாமணி, கோவில் பட்டர் வேலையை எல்லாம் விட்டுவிட்டு, கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் கடம்பூர் போளி விற்றுக் கொண்டிருப்பது அவனுக்கும் தெரியும்.
தனுஷ்கோடி அண்ணன் சைக்கிளை மிகுந்த பிரயத்தனத்துடன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கேரியரில் கட்டி வைத்திருந்ததை அவிழ்க்கத் தொடங்கினான். கேரியருக்கும் வெளியே காவி நிறத்துணியில் சுற்றப்பட்டு நீண்டு இருப்பது என்ன என்று தெரிந்துவிட்டது.
‘நான் எதுக்கு டா நைட் ஷிப்டுக்குப் போகணும்? மிகவும் உரக்கவும் இல்லாமல், தணிவாகவும் இல்லாமல் சுருதி சேர்க்கப்பட்டது போன்ற குரலில் காவி உறையில் பொதியப்பட்டிருந்த நாதஸ்வரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவினான். புற்றுக்குள் இருந்து வெளிவரும் பாம்பு போல, தனுஷ்கோடி அண்ணன் கையில் அவனுடைய அப்பாவின் நாதஸ்வரம் மினுங்கியது.
‘நான் யாரு தெரியுமா? நடேசக் கம்பர் மகன். நடேசக் கம்பர் மகன்’   தனுஷ்கோடி அண்ணன் திருப்பித் திருப்பிச் சொல்வது ஒரு நாதம் போலப் பெருகத் தொடங்கியிருந்தது..

%

ஆனந்த விகடன்
22-10-2014  








சந்தோஷம்













நேற்று தென்காசியில் இருந்தேன். ஊரில் இருந்தால் நம்பிராஜனைப் பார்க்கலாம் என்று தோன்றியது. விசாரித்தேன். அவர் வீடு மாற்றிவிட்டார் போல. நடு முத்தாரம்மன் கோவில் தெருவில் இருப்பதாகச் சொன்னார்கள். எங்கே இருக்கிறது என்று மீண்டும் ஒரு விசாரிப்பு.  ‘அங்கே யார் வீட்டுக்கு?’ என்று கேட்டார்கள். நம்பிஎன்று சொல்லவில்லை. விக்ரமாதித்யன் என்று சொல்லி அவருடைய தோற்ற அடையாளம் சொன்னேன். உடனே சொல்லிவிட்டார்கள். அவர் அன்றைக்கு ஒளிபரப்பாகும் ஒரு சினிமாவில் வருவார் போல. ‘இந்த சித்தர் மாதிரி இருப்பாரு ல்லா அக்கா?’ என்று உடனே வீட்டு அடையாளம் சொல்லி,’நடந்து போகிற தூரம் தான். நாலு எட்டில் போய்விடலாம் என்றார்கள்.  நிஜமாகவே ரொம்பப் பக்கம்தான். போய்விட்டேன்.தெருவில் வெடி போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஃபோன்  பண்ணியதும்  நம்பியே தெரு வாசலுக்கு வந்து, கூட்டிப் போய்விட்டார்.

ரொம்ப  வருஷத்திற்கு அப்புறம் பார்க்கிறேன். இடையில் பார்க்க வாய்க்கவே இல்லை. நம்பி அப்படியே இருக்கிறார். அந்தப் பெண், அவரை  சித்தர் மாதிரி என்று சொன்னது சரிதான். கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லை. நீர்க் கொண்டு காய்ச்சல்கார முகத்துடன் இருந்தார்.  சோர்வு எல்லாம் ஒன்றுமில்லை. ஒரு கால் பாதத்தை இன்னொரு கால் தொடையில் பதிவாகப் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசும் போது எனக்கு ஓங்கூர் சாமியாரை கோபுலு வரைந்திருந்தது ஒரு நிமிஷம் வந்துவிட்டுப் போனது.

கரையிலும் இல்லை. தண்ணீருக்குள் இறங்கி ரொம்ப ஆழத்திற்கும் போகவில்லை. முங்கின மாதிரி, நீச்சல் மாதிரி, பாறை மாதிரி, ஆறு மாதிரி இருந்தது பேச்சு. அவருக்கு யாரிடம் எவ்வளவு பேசவேண்டும் என்று எல்லாம் தெரியும். ’சித்துப்பு, சித்தினிப்பு’ என்று ஒரு சிட்டிகை உப்பு உரைப்புக் கூடாமல் பேசினார். ஏதாவது தகவல்களில் சந்தேகம் வந்தால், ’ஏன் பகவதி?’ என்று வலது பக்கத்தில் இருக்கும் வீட்டம்மாவிடம் கேட்டுக் கொள்கிறார்.;எங்கே, எப்போங்கிறது சில சமயம் அயத்துப் போகிறது’ என்று சிரிக்கிறார்.இப்படித் தும்பைச் செடிக்கு மேல்  தட்டான் பறக்கிற மாதிரிப் பேசியதிலேயே இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை.

புறப்படுகிற நேரத்தில் தான் அவருடைய பையன் சந்தோஷ் வந்தான். இரண்டு பேரில் இளையவன். திரைப்படக் கல்லூரியில்  ஒளிப்பதிவு படித்துத் தேறி, செழியனிடம்  உதவியாளராக இருந்து இப்போது தனியே இரண்டு படங்கள் பண்ணியிருப்பவன். சந்தோஷை அவன் இவன் என்று நான் சொல்வதில் ஒன்றும் தப்பில்லை. ஜமுக்காளத்தில் சின்னப் பையனாக அவன்  படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த ஒரு தோற்றம் என்னிடம் இருக்கிறது. அப்போது அந்தச் சின்ன குச்சுவீட்டிற்கு வெளியே படர்ந்துகிடந்த பீர்க்கங் கொடியும் மஞ்சள் பூவும் சந்தோஷை ஏக வசனத்தில் பேசும் உரிமையை எனக்குத் தந்திருக்கிறது.

நான் சந்தோஷைப் பக்கத்தில் இருத்திக்கொண்டேன். தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். சமீபத்தில் முகநூலில், இரண்டு தோளிலும் இரண்டு பழுப்பு நிறப் பூனைக்குட்டிகளை வைத்திருக்கும் அவனுடைய படம் வந்திருந்தது. நீங்களும் பார்த்திருக்கலாம். அந்த ஞாபகத்தில் , ‘பூனைக்குட்டி ரெண்டையும் எங்கே காணோம்?’ என்று கேட்டேன். உயிருள்ள கண்கள், நம்பி குடும்ப மூக்கு, முறுக்கு மீசை என்று ஆள்  தீர்க்கமாக இருந்தான். ‘நீ ஒளிப்பதிவு பண்ணப் போறியா? நடிக்கப் போறியா?’ என்று கேட்டேன். எதற்கும் பதில் சொல்லவில்லை. வெறும் சிரிப்பு. சிரிப்புதான் பதில்.

கொஞ்ச நேரம் கழித்து, செழியன் பற்றி,  கலகம் அமைப்பு பரிசுவழங்கியிருக்கும் அவனுடைய குறும் படம் பற்றி, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் நிலையில் இருக்கிற அவனுடைய இரண்டாவது படம் பற்றி, தற்போது அவன் வாசித்துக்கொண்டிருக்கும் ‘ஓநாய் குலச் சின்னம்’ பற்றியெல்லாம் பேச்சு நகர்ந்தது.

அப்புறம் வெளியே போய் பால் வாங்கிவந்தான். எல்லோரும் டீ சாப்பிட்டோம். பொதுப்படையாக கேலியும் சிரிப்புமாக மேற்கொண்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ரொம்ப நேரமாகிவிட்டது. புறப்பட்டேன். சந்தோஷ் தான் கூடவே வந்தான். மழை பெய்த வாசலில் ‘பார்த்து நட’க்கச் சொன்னான். தெருவில் வெடி போடுகிறவர்களை கொஞ்சம் நிறுத்தச் சொன்னான். பூக்கடையில் காலையில் ஏலம் போட்டது போக மிஞ்சின பூவைப் பை பையாகக்  கட்டித்  தூரப் போட்டிருந்தார்கள். பாலித்தீன் முடிச்சுடன், சிறு சிறு மர்ம பலூன்களாகக் கிடக்கும் அதைத் தாண்டிப் போகும் போது உண்டான நொடிநேர அமானுஷ்யத்தைக் கடக்க அவன் ஏதோ  சொன்னான். நான் ஏதோ சொன்னேன்.

வீட்டு வாசல் வரை கொண்டுவந்து விட்டான். உள்ளே வந்துவிட்டுப் போகச் சொன்னேன். வரவில்லை.’ ரொம்ப சந்தோஷம். ரொம்பசந்தோஷம்’ என்று இரண்டு முறைகள் சொல்லிவிட்டுச் சிரித்தான். அவனுடைய பெயரை, அவனே சொல்லி, அவனே அவனைக் கூப்பிட்டுக்கொண்ட அந்த முகம்  நன்றாக இருந்தது.

வீட்டுக் கல் நடையில் ஏறுகையில், எனக்குத் தோன்றியது. நான் நம்பிராஜனைப் பார்க்கத்தான் போனேன். ஆனால் பார்த்துவிட்டு வந்திருப்பது நம்பிராஜனை அல்ல, சந்தோஷை என்று.

ஒரு நேரத்தில் ஒருத்தரைப் பார்த்தால் போதாதா?

Tuesday 14 October 2014

ஒரு சாயுங்கால மழை, சில பூனைக்குட்டிகள்.










சுந்தரம் மழையையே பார்த்துக்கொண்டிருந்தான்.                        
எந்த ஆரவாரமும் இன்றிப் பெய்கிற மழையைப் பிடித்திருந்தது. சிதம்பரத்துடைய வீட்டில், தான் இப்படி ஒரு பழைய மர நாற்காலியில் உட்கார்ந்து பார்ப்பதற்காகவே, திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் அப்படி மழை பெய்கிறது என்று தோன்றியது. பிற்பகலும் இன்றி முன்னிரவும் இன்றி சாயுங்காலத்தில் பெய்கிற மழையை மிகவும் நெருக்கமாக அவனுக்கு உணர முடிந்தது. தெருவின் தார் பூச்சுமானத்தில் மழைத் தாரை விழுந்து கண்ணாடிச் சில்லாகச் சிதறிக்கொண்டு இருந்தது. நேர் எதிர் வீட்டின் வாசலில் நின்ற அரளிச் செடி, ஒரு பூவும் உதிராமல் அப்படியே தழைந்து தழைந்து அசைந்தது.
சரோ வீட்டு ஞாபகம் வந்தது. சரோ வீட்டின் முன் அரளி கிடையாது.  போகன்விலா பூக்கள். மழையில் நனையும் போது போகன் விலா பூக்கள் அவ்வளவு அழகாக இராது. ஒவ்வொரு பூவும் ஒரு பருவத்தில் அழகு. அதன் காலம் காற்று. காகித உலர்வுடன் காற்றில் தரையோடு தரையாக நகரும் சிவந்த பூக்களைப் பின்தொடர்ந்தால் சரோ வீடு வந்துவிடும். சரோ வீடு வந்துவிட்டது என்பதற்கு இன்னொரு அடையாளமும் உண்டு. காட்டுக் கொடிகளைப் போலத் திருகி வளர்ந்து கிடக்கிற போகன்விலா கிளைகளுக்குள் அடைந்து இடம் மாறித் தாவும் சிட்டுக்குருவிகள் சத்தத்தில், சரோ வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் கோலம் மிதப்பது போல இருக்கும்.

அந்தக் கோலங்கள் சரோவின் அப்பா கூடப் பிறந்த அத்தை போடுவது. சரோவுக்கு லீலா அத்தையை ரொம்பப் பிடிக்கும். லீலா அத்தையை பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கத்தான் செய்யும். ரெட்டியார்பட்டி பள்ளிக்கூடத்தில் லீலாவதி டீச்சரும்  அவருடைய கணக்குப் பாடமும் அத்தனை பிரபலம். லீலா அத்தை சிரிக்கிற மாதிரியும் இருக்கும். சிரிக்காத மாதிரியும் இருக்கும். பக்கத்தில் இருக்கிற மாதிரியும் இருப்பார்கள். தூரத்தில் போய்விட்டது போலவும் தோன்றும். கல்யாணம் ஆகிவிட்டதென்றும் சொல்கிறார்கள். பிடிக்காமல் வந்துவிட்டதாகவும் கேள்வி. பொட்டுவைத்திருக்கிறாரே தவிர, லீலா அத்தையைக் கட்டியவர் காலம் எப்போதோ முடிந்துபோயிற்று என்றும் பேச்சு உண்டு. எது எப்படியோ? லீலா அத்தை தான் தினமும் சரோ வீட்டு வாசலில் கோலம் போடுவது. கணக்குக்கும் கோலத்துக்கும் ஒரு பிடிமானம் உண்டு போல. அத்தனை புள்ளியில் அத்தனை வரிசையில் ஒரு இழைகூடப் பிசகாமல் அது படர்ந்து கிடக்கும்.

சரோ சொல்வது இன்னொன்று ஆச்சரியமாக இருக்கும். லீலா அத்தை வாய்க்குள்ளேயே பாடிக்கிட்டேதான் கோலம் போடும். வாசல் தெளிக்கிறவரை ஒரு சத்தம் இருக்காது. கோலப்பொடி டப்பாவை எடுத்ததும் பாட்டு ஆரம்பிச்சிரும். என்ன பாட்டுண்ணு நமக்குக் கேட்காது. பாட்டுண்ணு மட்டும் தெரியும். அது தெரிஞ்சாப் போறாதா?

சரோ இதைச் சொல்லும் போதும், இப்படிக் கேட்கும் போதும், ஆமாம் போதாதா? என்ன பாட்டு என்று தெரிந்து என்ன ஆகப் போகிறதுஎன்றுதான் எல்லோருக்கும் தோன்றும்.

சுந்தரம் சரோவை நினைத்துக்கொண்டே மழை பார்த்துக்கொண்டிருந்தான். சரோவை விட லீலா அத்தை ஞாபகம் அதிகமாக வந்துவிட்டது எப்படி என்று தெரியவில்லை. ஆட்டோ சத்தம் கேட்டது. சரோவாகக் கூட இருக்கலாம். எதிர்வீட்டில் ஒரு ஆட்டோ வந்து யாரையோ இறக்கிவிட்டுவிட்டு அவசரமாகக் கிளம்பிப் போயிற்று. சுந்தரத்துக்கு இதுவும் புரியாத ஒன்றுதான். மழைக்கும் வாகனங்களுக்கும் அப்படி என்ன பகையும் முரண்டும்? இரண்டு தூறல்கள் விழுந்ததும் எல்லா வாகனங்களும் அப்படி ஏன் விழுந்தடித்துக்கொண்டு ஓடுகின்றன?

‘சரோ வந்துட்டுதா? உள்ளே இருந்து அருணா குரல் வந்தது.
‘இல்லை அருணா அருணாவை அருணா என்றே கூப்பிட சுந்தரத்தை சிதம்பரம் அனுமதித்திருந்தான். இதெல்லாம் அனுமதி சம்பந்தப்பட்ட விஷயமும் இல்லை.

‘ஆட்டோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. சரி. நம்ம வீட்டுக்கு தான்னு நினைச்சோம்’ -  இப்போது சத்தம் கொடுத்தது சிதம்பரம். அவனும் சமையல் கட்டில்தான் இருக்கிறான். சிதம்பரமும் அருணாவும் அப்படி ஒன்றாகவே சமையல் கட்டில் புழங்குவதை வந்ததில் இருந்தே சுந்தரம் பார்த்துக்கொண்டு இருக்கிறான். கொஞ்ச நேரம் குக்கர் சத்தம், மிக்ஸி சத்தம் கேட்கும். அப்புறம் இடைவேளை விட்டது போல ஒரு அமைதி. உடனே பாத்திரம் உருள்வது போல ஒரு பெரும் சிரிப்பு. அருணாவுடையது அது. அவள் சிரித்து அடங்கட்டும் என்பது போல, சிதம்பரம் வெளியே வந்து ஃப்ரிட்ஜின் மேல் வரிசையில் இருந்து முட்டைகளை எடுத்துக்கொண்டு போவான்.

‘நல்லா இருக்கு, உங்க ரெண்டு பேரையும் பார்க்க சுந்தரம் வாய்விட்டே சொல்லிவிட்டான். நேற்று ரயில் நிலையத்திற்கு சுந்தரத்தை அழைத்துவர காரை எடுத்துக்கொண்டு வந்த்து கூட அருணாதான். சிதம்பரம் பக்கத்தில் இருந்து, பின்பக்கம் திரும்பி இவனோடு பேசிக்கொண்டு வந்ததோடு சரி. ஆனால் வீட்டுக்கு வந்ததும் ‘காஃபி எப்படி சுந்தரம் இருக்கணும்? ஸ்ட்ராங்காகவா, லைட்டாகவா?’  என்று கேட்டது சிதம்பரம். காப்பி அவ்வளவு தரமாக இருந்தது. மற்றவர்களுக்கான ஒரு காப்பியின் கசப்பை, இனிப்பை, அதை விட அதனுடைய சூட்டை எப்படி அவ்வளவு துல்லியமாகத் தீர்மானிக்க முடிகிறது சிதம்பரத்தால்?

அப்படிக் காப்பியை அருந்தும் நேரத்தில் அவர்களின் உரையாடல் ஆங்கிலத்துக்கு முற்றிலும் தானாக மாறி, ஒரு இசைத்தட்டின் அடுத்த பாடல் போல, வேறொரு வகை சங்கீதத்தை அது அடைந்துவிட்டிருந்தது.

‘உன் உதடுகளுக்கும் நாசிக்கும் இடையில் ஆவி படுகிற நேரத்தை நீதான் தீர்மானிக்க வேண்டும். உன் கண்கள் அப்போது கோப்பையின் உள்ளே உடைந்து அடங்கும் முடிவிலிக் குமிழிகளை எண்ணட்டும் என்று சுந்தரத்திடம் சிதம்பரம் சொல்லும் போது, அருணா அவன் பின்னால், ஒரு சித்திரம் வரைவதற்கு நிற்பது போல் ஒரு காப்பிக் குவளையுடன் நின்றாள்.

‘நீங்கள் இருவருமே உங்கள் சமையலறையை அழகாக்கிவிடுகிறீர்கள். அதன் முன்பு இந்தக் கோப்பையோ காஃபி நுரைகளோ ஒரு பொருட்டில்லைஎன்று சுந்தரம் சற்றுப் பரவசத்துடன் சொன்னான்.

‘அறைகள் மனிதர்களை அல்ல. மனிதர்களே அறைகளை எப்போதும் அழகாக்குகிறார்கள் அருணா சொன்னாள்.

‘வாஸ்தவம். அந்த மனிதர்கள் அருணா ஆகவும் சிதம்பரம் ஆகவும் இருக்கிற பட்சத்தில் சுந்தரத்தால் இதைச் சாதாரணமாகச் சொல்ல முடியவில்லை. அவனுடைய குரல் கம்மியது. அழுகை கூட வந்தது. மீதி இருந்த காப்பியை ஒரே மிடறில் விழுங்கினான். அவனுக்கு மீனா ஞாபகம் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. கையில் இருந்த காப்பிக் கோப்பை கீழே நழுவிவிடலாம் என்பது போல, அதை நொறுங்கும் அழுத்தத்துடன் இறுகப் பற்றினான்.

‘மீனாவும் நானும் இருந்த அறைகள் ஒருபோதும் அழகாக இல்லாமல் போயிற்று சிதம்பரம்என்று சுந்தரம் குனிந்தபோது, அருணா வந்து காப்பிக் கோப்பையை வாங்கிக் கொண்டாள். ‘கூல்என்று ஒற்றைச் சொல் சொல்லி, ‘சுந்தரமும் நீயும் சற்று நடந்துவிட்டு வாருங்கள் சிதா. வலது பக்கம் சற்றுத் தொலைவு நடந்தால் ஒரு நர்சரிப் பண்ணை வரும். நிறையப் பூக்கள். கேட்டால் அனுமதிப்பார்கள். சிவந்தியைப் போல ஒரு பெரிய வகைப் பூ இருக்கும். அப்படியொரு மஞ்சள். அப்படியொரு அடுக்கு. பாருங்கள். திரும்பி வரும்போது பிறைச்சந்திரன் உதித்திருக்கும். நேற்று அது ஒரு பாதரசப் படகு போல இருந்தது
அவள் சொல்லிமுடிக்கும் வரை காத்திருந்து, ‘நீயும் வரலாம் அருணா’  என்று சிதம்பரம் கூப்பிட்டான்.

‘சில சமயம் தனிமை நல்லது. சில சமயம் இருவர் நல்லது. தேவைப் பட்டால் மிகச் சில சமயம் மூன்றாமவர்என்று அருணா சிரித்தாள். என்னவோ சிதம்பரம்தான் கண்கலங்கிவிட்டது போல, சிதம்பரத்தின் தோளை அருணா தட்டினாள். அது சுந்தரத்துக்கானது என்று சுந்தரத்துக்குத் தெரிந்த்து.

சுந்தரம் மழையைப் பார்த்துக்கொண்டே, தன்னுடைய தோளைத் தடவிக்கொண்டான். அருணா தட்டிக்கொடுப்பது போலத்தான் இப்போதும் இருந்தது. ரொம்ப நேரம் மழை பெய்வது போலவும், அதே அளவுக்கு ரொம்ப நேரமாக தான் மழை பார்த்தபடி இந்த மர நாற்காலியுடன் அமர்ந்து விட்டதாகவும் அவனுக்குத் தோன்றிய சமயம், ஒரு பழுப்பு நிறப் பூனை ஒன்றின் பின் ஒன்றாக வரும் மூன்று குட்டிகளுடன் வாசலின் வலப்பக்கமிருந்து வீட்டுக்குள் நுழைந்தது. மழை மற்ற எல்லாவற்றையுமே மௌனமாக்கிவிடுவது போலவும், அந்த மௌனத்தின் நகரும் உருவங்களாகவே மழை இப்படிப் பூனையாகவும் குட்டிகளாகவும் வீட்டின் உள் வந்திருப்பதாகவும் சுந்தரம் நினைத்தான்.

நேற்றிரவு அவனும் சிதம்பரமும் அருணாவும் வெகுநேர்ம் மீனாவைச் சார்ந்தும், மீனாவை விட்டு விலகியும் பேசிக்கொண்டு இருந்தபோது, உறங்கவில்லையா?என்று கேட்பதாக, ‘உறங்குங்கள்என்று சொல்வதாகக் குரலிட்டுக்கொண்டு இருந்தது இந்தப் பழுப்பு நிற அம்மாப் பூனையாக இருக்கலாம்.  அக்காக் குருவி சத்தம் போடும் போது அக்காக் குருவி போலவும், பூனைக்குட்டி கூப்பிடும் போது பூனைக்குட்டி போலவும் சத்தம் கொடுக்காதவர் யாராவது இருப்பார்களா என்று சுந்தரத்துக்குத் தோன்றியது. அவனை அறியாமலே, ‘மியாவ்என்று சுந்தரம் குரல் எழுப்பியது அப்போதுதான்.

உள்ளே இருந்து அருணா கையைத் தட்டியபடி வேகமாக வந்தாள். சப்பாத்தி பிசைந்த கோதுமை மாவு கைகளில் அப்பியிருந்தது. அப்படி அப்படியே இருப்பதை, அப்படி அப்படியே செயல்படுவதை அருணா இயல்பாகவே பயின்றிருந்தால் மட்டுமே அவளுடைய சிரிப்பு இத்தனை அடுக்கடுக்கான அடர்த்தியுடன் இருக்கமுடியும்.

‘சுந்தரம். பேசாமல் நீ போய் மீனாவின் மடியில் படுத்துக் கொள். நீ இவ்வளவு அழகான பூனைக்குட்டி என்று அவளுக்குத் தெரிந்திருக்காதுஎன்று சிரிப்பின் அலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியவிட்டபடி, அந்தப் பூனைக்குட்டிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

நேற்றிரவு சுந்தரம் அவனுக்கும் மீனாவுக்கும் இடையில் நிகழ்ந்துவிட்ட, நிகழ்ந்துகொண்டிருக்கும் அத்தனையையும் சொல்லியபோது, சொல்லிக்கொண்டே வரும்போது, ஒரு கட்டத்தில் தாளமுடியாது அழுதபோது கூட ஒரு வார்த்தையும் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தவளா, ஒரு எலுமிச்சைத் தேனீரைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு, வினோதமாக நசுங்கிக் கிடந்த அவரைப் பையில் பொதியப்பட்டது போலக் கூர்மையாக அமர்ந்து இருந்தவளா, இன்றைக்கு மீனாவின் மடியில் தன்னைப் பூனைக் குட்டியாகப் படுத்துக்கொள்ளச் சொல்கிறாள்?!. சுந்தரத்திற்கு அப்படியொரு ஆச்சரியம் உண்டாயிற்றே தவிர, ஒரு பூனைக்குட்டி ஆகிவிட அவனுக்கு முழுச் சம்மதம் ஏற்பட்டது. ஒரு வெதுவெதுப்புக்கான எளிய உத்தரவாதம் அதில் இருப்பது போலவும் இருந்தது.

‘ஜாக்கிரதை சுந்தரம். அருணாவை எவ்வளவு நம்பவேண்டும் என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும். சரோவை வரச் சொல்லி இருக்கிறோம். இப்போது நீலா அத்தையும் இல்லை சிதம்பரம் சொல்லும் போது சுந்தரம்

‘நீலா அத்தை இல்லை. லீலா அத்தைஎன்றான்.

‘சரி. உனக்கு லீலா. எனக்கு நீலா. மொத்தத்தில் அத்தை.என்று சிரித்து, மேலே, அவளும் இல்லாமல் தனியாக சரோ இத்தனை வருடங்களுக்குப் பிறகு உன்னைப் பார்க்கவேண்டும் என்று வருகிறாள். ஒரு பூனைக்குட்டியாக உன்னைப்பார்த்தால் ஏமாற்றமாக இராதா அவளுக்கு? சிதம்பரம் அருணாவின் பக்கத்தில் அமர்ந்து, அவள் கையில் இருந்த பூனைக்குட்டியைத் தான் வாங்கிக்கொண்டே பேசினான். முன் கால்களின் அடியில் ஏந்தியிருந்த அவன் கைகளுக்குள், கீழுடலும் பின்கால்களுமாக, ஒரு மிருதுவான கனத்துடன் தொங்கிய குட்டி, கண்களை இடுக்கி அதன் அம்மாவைக் கூப்பிட்டது.

சுந்தரத்துக்கு லீலா அத்தை ஞாபகம் வந்தது. பாட்டுப் பாடியபடியே அவள் இடும் கோலங்களின் பொடி மினுங்கியது.  லீலா அத்தை போன்றவர்கள் எப்படி இறந்து போகலாம்? அவர்கள் எல்லாம் எப்போதும் நம்முடன் இருந்தால் என்ன?  லீலா அத்தையை மீனா பார்த்ததே இல்லை. கேள்விப்பட்டுக் கூட இருக்கமாட்டாள். ஆனால் லீலா அத்தை இருந்திருந்தால் தனக்கும் மீனாவுக்கும் இப்படியெல்லாம் ஆகியிருக்காது. எல்லாம் சுமூகமாக இருந்திருக்கும் என்று எப்படித் தோன்றுகிறது? மனம் ஏன் இப்படி யாருக்கும் யாருக்குமோ முடிச்சுப் போடுகிறது? யாரின் முடிச்சையோ யார் மூலமோ அவிழ்த்துவிடலாம் என நம்புகிறது?

சுந்தரமும் சற்று மடங்கி, அருணாவுக்கும் சிதம்பரத்திற்கும் பக்கத்தில் தரையில் உட்கார்ந்தான். சிதம்பரத்தின் கைகளுக்குள் ஒரு குலை போலத் தொங்கிக் கொண்டிருக்கும் பூனைக்குட்டியை வாங்கி, முகத்துக்கு நேரே உயர்த்தி, அதன் நாசியில் முத்தம் வைத்துக் கீழே விட்டான். அது மற்ற இரு குட்டிகளின் பக்கம் ஓடுவதையே பார்த்தான். சாம்பல் நிறத்தில், எப்போதும் ஜாக்கிரதையாகவும் உஷாராகவும் இருந்த இன்னொரு குட்டியை, அது விலகி நகர்ந்தும் விடாமல் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டான்.

அவர்கள் மூன்று பேர், பூனை, மூன்று பூனைக்குட்டிகள் ஆகிய இவர்களுக்கு மட்டும் எனக் கணக்கிட்டு அனுமதித்தது போல் பரவியிருந்த மழையிருட்டில் அல்லது மழைவெளிச்சத்தில் அந்த அறையும் அவர்களும் சோபிதம் உற்றிருந்தார்கள். கொஞ்ச நேரம் யாரும் எதுவும் பேசாமல், அவரவர் அசைவுகளுடனும் அசைவின்மையுடனும் அப்படியே இருந்தார்கள்.

சிதம்பரம்தான் அருணாவிடம் கேட்டான்.

‘ஏன் அருணா? நீதானே சரோவுடன் கடைசியாகப் பேசினாய்?

‘கடைசியாக அல்ல. சமீபத்தில்’. அருணா உடனடியாகச் சொன்னாள்.

‘சரி. சமீபத்தில். சாயங்காலம் வந்துவிடுவதாகத் தானே சரோ சொன்னாள்? = சிதம்பரம் அருணாவைப் பார்த்தான். அருணாவை அப்படிப் பார்க்க அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அருணாதான் சரோவை வரவழைத்தால் என்ன என்று முதலில் யோசித்தாள். ஏதோ ஒரு வண்ணம், ஒரு தீற்றல் பாக்கி இருப்பது போலவும், அது சேர்ந்தால் இந்தச் சித்திரம் நிரம்பிவிடும் என்றும் அவள் எதிர்பார்த்தாள். சுந்தரத்திடம் பேசினாள். லீலா அத்தையைப் போலவே சரோவும் இப்போது ஆசிரியையாக இருப்பதும், ஒன்றரை மணி தூர பிரயாணத்தில் பக்கத்து ஊரில் வசிப்பதும் பற்றிய தகவல்களை அருணாவே சொன்னாள் . அவளே சுந்தரம் இங்கே வந்திருப்பதாகவும், சரோ வரமுடிந்தால் நன்றாக இருக்கும் என்றும் சொல்லி சரோவிடம் ஒப்புதல் வாங்கினாள்.
                                                      
‘என்ன பதிலைக் காணோம். சரோ வந்துவிடுவாள் இல்லையா? என்ற சிதம்பரத்தைப் பார்த்து நிச்சயமான குரலில்

‘வந்துவிடுவாள்’  -  என்று அருணா சொன்னாள். ஒரு சிறு குறும்புச் சிரிப்புடன்; ‘சரோ வந்துவிடுவாள் இல்லையா. சுந்தரம்?என்று அவனைப் பார்த்தாள், மழை முற்றிலும் நின்றுவிட்ட முகம் அவனுக்கு வந்திருந்தது. சுந்தரம் அந்தச் சாம்பல் பூனைக்குட்டியை அதன் நெற்றியில் வருடிக்கொடுத்தபடி வாசலைப் பார்த்தான்.

‘ஏன், மீனா வர மாட்டாளா என்ன?என்றான்.

அந்தக் குரல்  மிருதுவாக, ஒரு பூனைக்குட்டியின் உடையதைப் போலவே இருந்தது.

%

தினகரன் தீபாவளி மலர் - 2014.