Monday 11 November 2013

சந்தனம்.








என்ன தூங்கலையா குட்டி?
சந்தனத்தைக் கவனித்த மாதிரியே தெரியவில்லை.
லோகாவின் தலைமுடியை விரல்களால் கலைத்துவிட்டு சைலு போய்க்கொண்டிருந்தார். அப்பா ரொம்பப் பிரியமான நேரங்களிலும் சந்தோஷமாக இருக்கிற பொழுதுகளிலும்தான் இப்படிச் செய்வார் என்று லோகாவுக்குத் தெரியும்.
இன்று அப்படி இருக்க நியாயங்கள் உண்டு. அவர் மிகவும் கனவு கொண்டிருந்த அந்த அருவிச் சாலை ரிஸார்ட் கட்டுமானத்தை முடித்து, காலையில் திறப்பு விழா நடத்தியிருந்தார். மலையின் நீல அழைப்புக் கேட்கிற தூரத்தில், அருவியின் வெள்ளி ரிப்பன் அசைவது தெரிகிற நெருக்கத்தில், அதுவும் ஒர் பெரும் நெருக்கடியிலிருந்து மீண்ட முதல்  நொடியில் துவங்கி வேகமாகக் கட்டி முடித்துவிட்டார்.
ஒரு கட்டத்தில், லோகாவின் பொறியியல் படிப்பு முதல் வருடத்தில் நின்று விடும் போல இருந்தது. மூன்று கார்களில், முதலில் குவாலிஸ், அப்புறம் ஃபியெஸ்டா இரண்டையும் விற்றிருந்தார். சமீபத்தில் உபயோகிக்கவே செய்யாத. அனேகமாக சாலைகளை மறந்துவிட்ட பிரிமியர் பத்மினியை அவரே ஓட்டினார். இப்போது மறுபடியும் இன்னோவா.  மறுபடி டென்னிஸ். மறுபடியும் டிஸ்ட்ரிக்ட் க்ளப் பின்னிரவுகள். லோகா படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். அவளுக்குக் கல்யாணம் பேசி தேதி வைத்தாயிற்று.
லோகா அப்பா போவதையே பார்த்தாள்.  அப்பா அவருக்குப் பிடித்த இரவு உடையான கட்டம்போட்ட வெள்ளை லுங்கியில் இருந்தார். குளித்த புத்துணர்வு முகத்தில். வாசனைத் தெளிப்புடன் மிதமாக அருந்திய வேறு வாசனையும் அவருடன் நகர்ந்தது. சற்று நேரத்தில் படுக்கையறையில் இருந்து இசை வரும். அனேகமாக வீணை. போகும் போது அப்பா ஒரு இடத்தில் நின்றார். இந்தத் தாழ்வாரத்துக்கும் அவருடைய அறைக்கும் போகிற இடத்தில் வளர்ந்து கிடக்கும் புல்லுக்குள் இரண்டு கீரிப் பிள்ளைகள் வருவது போலவும் போவது போலவும் விளையாடிக்கொண்டு இருந்தன.
‘சந்தனத்தை எல்லா விளக்குகளையும் போடச் சொல், லோகா’  என்று அங்கே இருந்து சத்தம் கொடுத்தார். இதைச் சந்தனம் தாத்தாவிடமே நேரடியாகச் சொல்லியிருக்கலாம். லோகாவுக்கு நேர் எதிரே தான் அவர் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார். ஆனால் சொல்ல மாட்டார். தன் மடியில் இருந்த பூச் செண்டுகளைக் கீழே வைத்துவிட்டு சந்தனம் எழுந்திருக்கச் சிரமப்பட வேண்டும். வயதாகிவிட்டது. மூன்று தலைமுறைகளாக இந்த வீட்டோடும் வாசலோடும் சம்பந்தம்.
‘நீங்க இருங்க தாத்தா- லோகா எழுந்திருந்து அத்தனை விளக்குகளின் பொத்தானையும் அமுக்கினாள். எது எதற்கானது என்று தெரியாமல் எல்லாவற்றையும் அழுத்தியதால், அழைப்பு மணியும் சத்தமிட்டது. பின் வாசலை ஒட்டியும் ஒரு அழைப்பு மணி வைக்கவேண்டும் என யோசனை சொன்னது சந்தனம் தாத்தா தான். ‘என்னை மாதிரி புறவாசல் வழியாகப் புழங்குகிறவனுக்கு அப்படி ஒண்ணு வேணும்லா’  - என்று அவர்தான் சொன்னதாகவும், அது நல்லதாகப் போய்விட்டதாகவும் லோகாவின் அம்மா, பின் வாசல் வழியாக நாட்டுக்கோழி முட்டை கொண்டுவந்து கொடுக்கும் பழனித்தெரு அம்மாக்குட்டியிடம் சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டு இருந்ததை லோகா கேட்டிருக்கிறாள்.
அம்மாக்குட்டிக்கு அப்போதே ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவளுக்கு சந்தனம் தாத்தாவைப் பிடிக்கும் போல. எழுபது வயதில் முடி எப்படி நரைக்காமல் இருக்கும்? மேல், கால், நெஞ்சு எல்லாம் சுருட்டை சுருட்டையாக வளர்ந்து கிடக்கிற அவரைப் பார்த்து, ‘ ஆளைப் பாருங்களேன், கரடி மாதிரி இருந்துக்கிட்டு. கரடி. கரடிஎன்று குனிந்துகொண்டே சொல்வாள். தாத்தாவும் லேசுப்பட்டவர் இல்லை. அம்மாக்குட்டியின் முட்டைக் கூடைக்குள் கையை விட்டு ஒன்றை எடுத்து, பூப்போல குளியலறைச் சுவரில் தட்டி, அப்படியே இரண்டாகப் பிட்டு வாயில் விட்டுக்கொள்வார். அத்தோடு முடிந்து போகாது. ‘இது சைலு அய்யா கணக்குக் கிடையாது. உன் ஆமக்கன் கணக்கில எழுதிக்கோஎன்று வாயைத் துடைத்துக் கொள்வார். ‘ஆமக்கன்என்றால் லோகாவுக்கு அர்த்தம் தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டால், ‘யாரு சொன்னாங்களோ அவங்க கிட்டேயே போய்க் கேளுஎன்று நகர்ந்துவிட்டாள்.
எல்லா விளக்குகளும் பளீரென்று எரிய, இந்தப் பதினோரு மணிக்குப் பிந்திய இரவில் வீடு வேறொரு மாதிரி அழகாகிவிட்டது. விசேடம் நடக்கிற வீடுகளில், ஒவ்வொரு இரவும் ஒரு மாதிரி அழகாக இருக்கிறது. விசேடம் நடக்கப் போகிறபோது ஒன்றாகவும், நடந்து முடிந்த பிறகு முற்றிலும் இன்னொன்றாகவும் அது ஆகிவிடுகிறது. அலுப்பில் சற்றுச் சீக்கிரமாகவே படுத்துவிட்ட லோகாவின் அம்மா, எல்லா விளக்குகளும் எரிந்தவுடன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். வெளியே வரும்போது அவளுடன் தலைவலித் தைல வாசனையும் வந்தது.  ‘என்ன? தாத்தாவும் பேத்தியும் தூங்குகிறதாக இல்லையா?என்று கேட்டாள். படுத்து எழுந்திருந்த முகத்துச் சிரிப்பு. லோகாவின் அம்மா வருவதைப் பார்த்ததும் நீட்டியிருந்த கால்களை மடக்கிக்கொண்ட சந்தனம், ‘அய்யா கீரிப் பிள்ளைகள் கூடப் பேசிக்கிட்டு இருக்காஎன்றார். லோகாவுடைய அம்மாவிடம் அவர் சிரித்தால் போலப் பேச முடிந்தது.
லோகாவின் அம்மாவைத் தன் பக்கம் வரச் சொல்லி சைலு கையை அசைத்துக் கூப்பிட்டார். லோகாவின் அம்மா பெயர் மணிமேகலை. சைலு, ‘பாப்பாஎன்றுதான் சொல்வார்.  கையை அசைக்காமல், ஒரு தடவை ‘பாப்பாஎன்று அவர் கூப்பிடவேண்டும் போல லோகாவின் அம்மாவுக்கு விருப்பம் உண்டாயிற்று. தானாக வந்த சிரிப்புடன் வழியில் நிற்கிற வெள்ளைச் செம்பருத்திச் செடியைத் தடவியபடி நடந்து போனாள். லோகாவுக்கு அப்பாவை நோக்கிப் போகும் அம்மாவைப் பிடித்திருந்தது. தாத்தாவின் தோள்களைத் தட்டி அவர்கள் பக்கமாகக் காட்டினாள்.
‘கண்ணு தெரியலையேஎன்று இடது பக்கம் துளாவி, தரையிலிருந்த கண்ணாடியை அணிந்து பார்த்தபடி சிரித்தார். ‘நிறைஞ்சாப்பில இருக்கு தாயிஎன்றார். லோகாவுக்கு அம்மாவும் அப்பாவும் அப்படி ஒன்றாக நிற்பது இந்த இரவின் மிக நல்ல காட்சியாக இருந்தது. இப்போது கீரிகள் கூட, போய்விட்டிருந்தன. வெறும் புல்லை மட்டுமே பார்த்து நின்றார்கள். எதையுமே பார்க்காவிட்டால் கூட, அவர்கள் அழகாகத்தான் இருப்பார்கள் என்று லோகாவுக்குத் தோன்றியது.
சைலு ஏதோ சொல்ல, லோகாவின் அம்மா சற்று உரக்கச் சிரித்து அவர் தோளில் அடிப்பதும் லோகாவை அங்கே வரச்சொல்வதுமாக இருந்தாள். லோகா போகவில்லை. இங்கிருந்துகொண்டு, ‘நீங்கள் இருவரும் அங்கே இருப்பது நன்றாக இருக்கிறதுஎன்று பெருவிரலையும் சுட்டு விரலையும் வட்டமிட்டுச் சொன்னாள். அவர்களை ஒரு புகைப்படம் எடுத்தாள். எப்படி வந்திருக்கிறது எனப் பார்த்துக்கொண்டாள். மேலும் இரண்டு மூன்று எடுத்தாள். எடுத்ததை விரல் தடவி நகர்த்தி, பெரிதாக்கி, இடது வலது புறம் சரிசெய்து சந்தனத்திடம் காட்டினாள். அப்புறம் அவரை அவள் எடுத்திருந்த படங்களையும்.
‘என்னைப் போயி எதுக்கு இம்புட்டுப் படம் பிடிச்சிருக்கிய தாயி?என்று சந்தனம் சிரித்தார். கருப்புச் சட்டத்துக்குள் கனத்த லென்ஸில் மினுமினுத்து பூதம் காட்டிய அவருடைய முதிர்ந்த கண்களின் இமைகள் சந்தோஷத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சி இறகுகளாக அசைந்து மூடின.
‘ ஏ யப்பா. எம்புட்டுப் படம். சாகமாட்டாதவனுக்கு வந்திருக்கிற பவுசைப் பார்க்கணுமேஎன்று அவர் அவளிடம் சொல்கையில் பார்த்த படத்தில் அவர் அவருடைய இயல்பான நிலையில் எப்போதும் போல இருந்தார். பழைய காலத்து பச்சை பெல்ட்டும் மணிபர்சும். இடுப்பில் ஒரு சாயல்புரம் சாரம். மேல் சட்டை கிடையாது. இன்னொரு விஷேச அடையாளம் கழுத்தில் போட்டிருக்கிற துண்டின் இரண்டு நுனிகளையும் அவர் வலது இடது கைகளின் கீழ் கக்கத்துக்குள் செருகி வைத்திருப்பது. ஆறு அடி உயரத்தில் வீமனைப் போல அவர் நிற்பதைப் பார்க்கையில் சிலந்திமனிதன் போல லோகாவுக்குத் தெரிந்தது. எல்லாப் படங்களிலும் மெத்தை போல அவருக்கு நெஞ்சில் இருக்கிற முடியைப் பார்த்ததும் அவரே, வாஸ்தவம்தான். கரடிண்ணு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க கிழட்டுப் பயலுக்குஎன்று சிரித்தார். வெற்றிலையும் புகையிலையும் சுருட்டும் பல்லில் கறையேற்றி இருக்கிறதே தவிர, ஒன்று கூட விழவில்லை. வரிசை தப்பவில்லை.
லோகா ‘இதைப் பாருங்கஎன்று இன்னொரு படத்தைக் காட்டினாள். ‘இது மோகினிப் பிசாசு மாதிரி இல்லா கூடவே கூட்டிக்கிட்டுப் போகுது. விடிய விடியண்ணாலும் மாத்தி மாத்தி எம் மூஞ்சியைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். ஜோலி கெட்டுப்போகும் வள்ளிசா. ஏற்கனவே பதினொண்ணு தாண்டியாச்சு ‘. சந்தனம் சொல்லிக்கொண்டே தன்னைச் சுற்றிப் பார்த்தார். திறப்பு விழாவுக்கு அளிக்கப்பட்ட பூச்செண்டுகளில் ஏழெட்டை அவரும் லோகாவும் தனியாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். வெள்ளை, மஞ்சள், சிவப்பு ரோஜாக்கள், டேலியா, ட்யூலிப், கருநீல ஆர்க்கிட் மலர்கள்.
முதலில் பொன்னிற, நீல நிற, பச்சை நிற ரிப்பன்களைப் பிரித்து, கண்ணாடி சுற்றுத்தாட்களை அப்புறப்படுத்தி ஆயிற்று. இரண்டு பேர் கைகளிலும் இரண்டு கத்தரிக் கோல்கள் இருந்தன. நீண்ட காம்புகளைத் தேவைக்கு ஏற்ப வெட்டி, வெண்கலப் பாத்திரங்களில் நீர்விட்டு வைக்கலாம் என லோகா சொன்னது அவருக்குப் பிடித்துப் போயிருந்தது. நாளைக் காலையில் எல்லோரும் எழுந்திருப்பதற்குள் மூன்று நான்கு இடங்களில் அவற்றை வைக்க வேண்டும். முக்கியமாக பெரிய அய்யா படத்தின் முன்பு, சைலுவின் அறையில், லோகாவின் அம்மாவின் வணக்கத்திற்கு உரிய ‘அன்னைபடத்தின் முன்னாலும்.
‘இந்த ஒன்றை மட்டும் பாருங்க தாத்தா லோகா அவர் பக்கத்தில் வந்து காட்டும் போது, சந்தனம் மேல் துண்டை இழுத்து கக்கத்துக்குள் செருகிக் கொண்டார். கைவிரல்களுக்குள் கத்தரி விரிந்து இருந்தது. ஒரு தொழில்முறை பூ அலங்காரக்காரர் போல, சீரான அளவுகளில் காம்புகளைச் சந்தனம் நறுக்கியிருப்பதில் ஒரு நுணுக்கம் இருந்தது. வெகுகாலம் தண்ணீர்க் கரையில் நின்ற ஒரு நாணலின் துண்டுகள் என , குளிர்ந்த பச்சையாக வெட்டப்பட்ட அடிக்கட்டைகளை லோகா கையில் அள்ளி உருட்டினாள். அவள் காட்டிய படத்தில் சந்தனம் வானுயர நின்ற ஒரு வேப்ப மரத்தை ஆவி சேர்த்துத் தழுவிக்கொண்டு இருந்தார்.
அந்தப் புகைப்படத்தை எடுக்கும் போது லோகாவிடம் அவர் சொன்னார், ‘இந்த மரம் நான் உங்க தாத்தா கிட்டே வேலைக்குச் சேருகிறதுக்கு மின்னாடியே இருக்கு. நூறு வயசு நூத்தம்பது வயசு இருக்கும். இந்த நூறு நூத்தம்பது எல்லாம் நம்ம சௌகரியத்துக்கு நாமளா வச்சுக்கிடுதது தான். மனுஷாளுக்குத்தான் வயசு எல்லாம். மரத்துக்கு  ஆதி அந்தம் கிடையாது. உங்க தாத்தாவுக்கு மின்னாடி அது இருந்தது. உனக்குப் பின்னாடியும் இருக்கும். அந்தா அந்த மலையை ஒரு விரல்கடை நகட்ட முடியுமா? அருவியை நகட்ட முடியுமா? அது மாதிரிதான் இதையும் வச்சுக்கோ தாயி’ . இத்தனை சொல்கையிலும் அவருடைய முழு உயரமும் உடம்பும் படுகிற வகையில், அதன் மேல் அப்பிக்கிடந்து ஊர்ந்துசெல்லப் போகும் ஒரு உயிர்ப்பிராணி போல சந்தனம் அந்த வேப்பமரத்தின் தூரைக் கட்டிப்பிடித்திருந்தார்.
மேற்கே தூரத்தில் மலையும், வடகிழக்காகத் திரும்பியதும் பாதை பள்ளமாகிற இடத்தில் இதே போல பெரும் வழுவழுத்த சுவராக நிற்கிற பாறையிலிருந்து விழும் அருவியும் இருக்க, ஒரு பெருமரமாகத் தனித்து வளர்ந்திருக்கும் அதை, பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் மரப்பட்டையை, அடி மரத்தை எல்லாம் தடவிக்கொடுத்தபடியே லோகாவிடம் அவர் சொன்னார்.
‘உங்க தாத்தாவுக்குப் பொங்கி ஆக்கிப் போடுத ஒரு தவசிப் பிள்ளையாத் தான் இங்க வந்து சேர்ந்தேன். பத்துப் பதினாறு வயசு இருக்கும். கரிசல் குளத்தில் மாடு,கண்ணு மேச்சுக்கிட்டுக் கிடந்த பயலை, கோயில்பட்டி வக்கீல் ஒருத்தர் மாரியமா, பெரியய்யா கூட்டிக்கிட்டு வந்தாக.’  இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி, கழுத்தைத் திருப்பி இடது கையை விசாலமாக வீசி, இங்கேர்ந்து அங்க குளத்துக் கலுங்கு வரைக்கும் அய்யா நிலம் தான்.’  என்று காட்டினார். தண்ணீர் தளும்பிக் கிடக்கிற குளத்தின் கரையில் நாரைகள் வெள்ளையாக இறங்கிக்கொண்டிருப்பதை லோகா பார்த்தாள். பறவைகள் என்பதையும் மீறிய அந்த வெள்ளை அசைவு அவளை அந்த நீர்த்தகடுக்கு இழுத்த சமயம் சந்தனத்தின் வார்த்தைகள் மட்டும் கேட்டன. நீல மலைகளில் இருந்து இறங்கி இந்த அத்துவான வெளியை, வயலை, கட்டப்பட்டிருக்கும் இந்த ரிஸார்ட் கட்டிடத்தை எல்லாம் தாண்டி அந்த மரத்தை நோக்கி சந்தனத்தின் குரல் ஒரு கருவண்டு போலப் பறந்துசெல்வதை அவளால் உணர முடிந்தது.

‘வத்தாத குளத்துப் பாசனம். பெருங்கொண்ட விவசாயம் பண்ணினாரு மகராசன். மனுஷன் கூட அப்படிச் சொன்னபடி கேக்க மாட்டான். மண்ணு அவருக்கு அப்படிச் சொன்னபடி கேட்டது. அவரும் காட்டிலேயேதான் கிடப்பாரு. நானும் இந்தக் காட்டிலேயேதான் கிடப்பேன். பெரியய்யா பல ஜோலிக்காரரு. விவசாயம். விவசாயத்தை விட்டால் வியாபாரம். வியாபாரத்தை விட்டால் கூப்புக் காண்ட்ராக்டு. அது ஒரு பொங்கு திசை. அவுக தொட்டது எல்லாம் துலங்கின நேரம்
‘நான் இங்கனயே ஒத்தையில கிடப்பேன். பேச்சுத் துணைக்குக் கூட ஆள் கிடையாது. இசக்கியம்மன் மாதிரி இதுதான் கூடவே இருக்கும். அங்கே கடுவா வந்துது. இங்கே ஆனை கூட்டம் கூட்டமா இறங்குச்சுண்ணு சொல்லுவாக. இங்கே மூச்சு. பேசப்படாது. ஒரு இடைஞ்சல் கிடையாது. எங்க அம்மை செத்துப் போனது. என் கூடப் பிறந்த அக்காக்காரி ஒருத்தி பேறுகாலத்தில தாயும் பிள்ளையுமா போய்ச் சேர்ந்தது, நம்ம வீட்டு வண்டி மாடு, ஒட்டாங் காளை ஜோடியை ஒண்ணு போல பாம்பு கொத்தினது, நடு வீட்டுல பெரியய்யா வீட்டு நாச்சியாரைக் கட்டிவச்சு நகைய அத்துக்கிட்டுப் போனது,  எல்லாத்தையும் இந்த மரத்துக்கிட்டேதான் சொல்லி அழுதிருக்கேன். நல்லதுண்ணாலும் கெட்டதுண்ணாலும் அதுகிட்டேதான் சொல்லுவேன். ‘இதுக்குப் போயி மனுஷன் அழுவானான்னு ஒரு தடவை சத்தம் கேக்கும். இன்னின்ன மாதிரி இப்படிப் பண்ணுன்னு ஒரு தடவை ரோசனை சொல்லும். ரெண்டு மூணு வாட்டி விடிய விடிய அம்பிலியோட அம்பிலியா, ராத்திரிப் பூரா அது கூடவே நிண்ணுருக்கேன்’.  சந்தனம் இதைச்சொல்லும் போது லோகாவுக்குத் தானும் அப்படியொரு நிலாக் காலத்தில் மேடும் சரிவுமாக உள்ள ஏதோ ஒரு புல்வெளியில் தனியாக நிற்பது போலவும், நிற்கவேண்டும் போலவும் இருந்தது.
‘என்னை எல்லாரும் கிறுக்குப் பய. மரத்தோடு பேசிக்கிட்டு இருக்கான்னு சொல்லுவாங்க. சைலு அய்யா கூட அப்படிக் கிண்டல் பண்ணுவாரு. ஆனா பெரியய்யா ஒரு நாள் கூட அப்படிச் சொன்னது கிடையாது. சொல்லப் போனா, என்னை விட்டுக் கொடுக்காமல்தான் மத்தவங்க கிட்டே பேசுவாரு. உன்னாலயும் என்னாலயும் மரத்துக் கிட்டே பேசமுடியுமா? அவன் பேசுதான். அது திலுப்பி அவன்கிட்டே பேசுதுங்கான். அப்படிண்ணா உன்னையும் என்னையும் விட, அவன் கூடுதல்லா. என்ன நான் சொல்லுதது?என்று மனசாரச் சொல்லுவார். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா தாயி. சைலு அய்யா என்னைக் கிண்டல் பண்ணினாரே தவிர, ரொம்ப இக்கட்டான ஒரு கட்டத்தில், நாலு வருஷத்துக்கு முந்தி, காரில என்னையும் ஏத்திக்கிட்டு இங்க வந்துட்டாரு. நேரா இந்த மரத்துக்கிட்டே போயி கெட்டிப்பிடிச்சு அழுது புலம்பினாரு. நான் இந்தக் கண்ட்ராவி நமக்கு எதுக்குண்ணு தள்ளிப் போயி நிண்ணுக்கிட்டேன். செத்த நேரம் ஆயிருக்கும். ஏதோ உத்தரவு கிடைச்ச மாதிரிக் கண்ணைத் துடைச்சுக்கிட்டே வந்து, போலாம்னு கிளம்பிட்டாக. அதிலே இருந்து எண்ணி ரெண்டே மாசத்துல, அளக்கிறது என்ன, நூல் பிடிக்கிறது என்னண்ணு கட்டுமான வேலையை ஆரம்பிச்சாச்சுஎன்றார்.
‘உங்க தாத்தா காலத்துல வயல்காட்டைக் காத்துக்கிடந்தேன். இந்த ரெண்டு மூணு வருஷமா கட்டிடத்தைக் காத்துக்கிட்டுக் கிடக்கேன். இடையில கொஞ்சம் தடங்கல், கொஞ்சம் உபத்திரியம் தான். ஆனாலும் எல்லாம் நல்லபடியா இன்னிக்கு முடிஞ்சுட்டுது. எல்லாத்தையும் பூட்டி உங்க அப்பா கையில, அல்லது அவரு யாருகிட்டே கையைக் காமிக்காரோ அவுககிட்டே திறவுகோலைக் கொடுத்துட்டு அக்காடாண்ணு எங்கியாவது ஒரு ஓரமா உக்காரணும். சீட்டு வார வரைக்கும், எப்பம்டா வரும்ணு காத்துக் கிடக்கணுமே. அது பெரிய இம்சையில்லா’  - இவ்வளவையும் பேசும்போதும் கையில் இருக்கிற கத்தரிக்கோலால் ஒவ்வொரு பூவாக நறுக்கி எடுத்து அடுக்கிக்கொண்டு இருந்த சந்தனத்தைப் பார்க்க, லோகாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.
லோகாவின் அம்மாவுக்கு, சந்தனம் மேல் ரொம்ப மரியாதை. மாமனார் இருக்கிறவரை அவருக்குக் கொடுத்த மரியாதைக்குக் கொஞ்சமும் குறைந்தது அல்ல அது. அந்த அளவுக்கு சந்தனமும் இருந்திருக்கிறார். லோகாவின் அப்பாவுக்கு வியாபாரம் நொடித்துப் போவதற்கு முன்பே, வேறொரு பள்ளம் விழுந்துவிட்டது லோகாவின் அம்மாவுக்கு. தாண்டமுடியாத பள்ளமாகப் போய்விடுமோ என்றுதான் மணிமேகலை கூட நினைத்தாள்.
ஜெகதா என்கிற அந்தப் பெண்ணுக்கு அஞ்சு கிராமமோ, கன்யாகுமரிப் பக்கமோ. வணிக வரி அலுவலகம், வருமான வரி அலுவலகம் ஏதோ ஒன்றில் வேலை. சைலுவுக்கு எப்படியோ பழக்கமாகிவிட்டது. இந்த ஒரு விஷயத்தில் எப்படி என்றுதான் திட்டமாக யாராலும் சொல்ல முடியாதே. கொலுவுக்கு அழைத்திருக்கிறார்கள். வா பாப்பா. ஒரு மரியாதைக்குப் போய்விட்டு வந்துவிடலாம்என்று சைலு கூப்பிட்டார். விவரம் தெரியாமல் லோகாவின் அம்மாவும் காரில் போய்விட்டு வந்தாள். ஏதோ தெலுங்குப் பாட்டு. அந்தப் பெண் நன்றாகத்தான் பாடினாள். இவளைக் கூட, ‘நீங்களும் பாடுங்கோஎன்று சொன்னாள். சைலு சொல்லியிருப்பார் போல, ‘பாப்பா நல்லா பாடுவாஎன்று. மணிமேகலை பாடுவாள்தான். ஜென்சி பாட்டு எல்லாம் நிறையத் தெரியும். ஆனால் அன்றைக்குப் பாடவில்லை. ஏதோ இவளிடம் ஒப்புதல் வாங்கிவிட்டது போல அதற்குப் பிறகு சைலு போவதும் வருவதும் அதிகமாகிவிட்டது. இது எல்லாம் வீட்டில் எத்தனை நாளைக்குத் தாங்கும்?
அடிக்கடி சண்டை. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சட்டென்று எல்லா விளக்குகளையும் எரியவிட்டுக்கொண்டு பெரும் குரலில் சைலு போடுகிற சத்தம் தெருவரைக்கும் கேட்கும். ‘மானம் போகுதுஎன்று மணிமேகலை சொன்னால், முன்னையும் விடச் சத்தம் அதிகமாகும். லோகாவையும் தன்னையும் தீயைப் பொருத்திக்கொள்ளப் போனதைத் தடுத்தது, சமாதானம் பண்ணியது எல்லாம் சந்தனம்தான். வேறு ஒன்றும் சொல்லத் தெரியாது. ‘பொறுமையா இரு தாயிஎன்பதை மட்டும் திருப்பித் திருப்பிச் சொல்வார். அழுதுகொண்டு வெறும் தரையில் படுத்திருந்தால், ஒரு தலையணையை  எடுத்து நீட்டி, ‘சாப்பிட்டியா தாயி?என்று கேட்பார். லோகாவைக் காட்டி, ‘இந்தப் பிள்ளைக்கு யாரு பதில் சொல்லுவாங்க?என்று அவரும் அழுவார். இரண்டு மூன்று தடவை யாருக்கும் தெரியாமல் சங்கிலியை அடகு வைத்துக் கொண்டுவந்து கொடுத்ததும் உண்டு.
சைலு பக்கம் நின்று கீரியைப் பார்க்கப் போய், புல்லாந்தரிசைப் பார்த்தபடி நின்ற லோகாவின் அம்மா திரும்பி வராமல் அப்படியே சைலுவின் படுக்கையறைக்குப் போய்விட்டது அவருக்கு சந்தோஷமாக இருந்தது. இந்த இடம் இப்படிச் சரியாகப் போகும் என்று எல்லாம் அவர்களுக்குள் நடந்த சண்டையைப் பார்த்தவர்களால் நம்பக்கூட முடியாது. ஆனால் எப்படியோ சரியாகப் போய்விட்டது. அவ்வளவுதான் சொல்லமுடிகிறது. இதை லோகாவும் தெரிந்துகொள்ளட்டும் என்பது போல, ‘ அம்மையை எங்க காணோம்? கீரிப் பிள்ளை கவ்விக்கிட்டுப் போயிட்டுதா?என்று லோகாவிடம் கேட்டார். லோகாவுக்குத் தெரியும். ஆனால், ‘தெரியலையே தாத்தா’  என்றாள்.  கூடுமானவரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அப்பிராணியாக முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என பெண்பிள்ளைகளுக்குத் தானாகவே பிடிபட்டு விடுகிறது.
லோகா கையில் இருந்த செல்ஃபோன் மினுக்கத்தைப் பார்த்துவிட்டு, ‘அவரு கூப்பிடுதாரு தாத்தா. வந்திருதேன்என்று எழுந்திருந்து போனாள். ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருப்பாள் போல. அவசரத்தில் அவள் மடியில் நீண்ட காம்புடன் இருந்த இரண்டு மூன்று மஞ்சள் மலர்கள் கீழே விழுந்தன. கல்யாணத்திற்கு முந்தி அர்த்த ராத்திரியில் அப்படி என்ன பேசுவார்கள் என்று சந்தனத்திற்குச் சிரிப்பு வந்தது.
லோகா அந்தப் பக்கத்துப் பேச்சின் கிறக்கத்தில் மிதந்து போவதைப் பார்க்க அவருக்கு நிறைவு அதிகம். களங்கமே இல்லாத ஒரு பிரியத்தின் தடாகத்தில் அவள் ஒரு தாமரைப் பூ போல மலர்ந்து தண்ணீர்ப் பரப்பு முழுவதையும் நிரப்பிக்கொண்டு இருந்தாள்.  கரை தெரியாமல் கிடக்கிற ஒரு பெரிய நீர்வெளியில் லோகா இங்கும் அங்குமாக நீந்திப் போவது போல நினைத்தார். ஒரு கணம் அவருக்கு இந்த இடத்தில் இப்படிப் பூவை எல்லாம் கத்தரித்துக்கொண்டு பெரியய்யா உட்கார்ந்திருப்பது போல ஒரு காட்சி பிடிபட்டு, உடம்பு சிலிர்த்தது. கும்பிட்டுக்கொண்டு, யய்யாஎன்றார். ஒரு சாயலுக்கு, லோகா அப்படி எழுந்திருந்து செல்லும்போது உண்டான அசைவுகள், தான் இத்தனை காலமும் எல்லாக் கதையையும் சொல்லிவந்த அந்த வேப்பமரத்தின் கிளை தணிந்து அசைவது போல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக யாரிடமும் சொல்லாமல் ஒளித்து வைத்திருக்கும் ஒன்றிரண்டையும் இவளிடம் சொல்லிவிட்டால் நிம்மதியாக இருக்கும். இந்த நினைப்பில் சந்தனம் தன் நெஞ்சு முடிக்குள் விரல்களை விட்டுக் கோதி அடிவயிறு வரைக்கும் நீவி விட்டார்.
இந்த முடியை ரொம்பப் பிடிக்கிற ஒருத்தி அவருக்கு இருந்தாள். இப்போது உட்கார்ந்திருக்கும் பெரிய வீட்டை எடுத்துக் கட்டுவதற்கு முன், வட பக்கத்தில் ஒரு மாட்டுத் தொழுவம் உண்டு. பத்து இருபது மாடுகளை நெடுக்கு வாட்டில் கட்டிப் போடலாம். அதற்கு மேல் பக்கம் ஒரு துலாக் கிணறு. கிணற்றுக்கும் மேல் பக்கம் ஒரு பள்ளத்தில் எருக்குழி. அதற்குப் பிறகு கீரைப் பாத்தி. கொஞ்சம் தள்ளி, சுண்ணாம்புக் காளவாசல்.
கீரையைப் பறித்து வியாபாரம் செய்கிற பேச்சியம்மை கண்களில்தான் சந்தனம் அந்த இசகுபிசகான காரியத்தில் இருந்த சமயத்தில் பட்டுவிட்டார். சந்தனத்தின் உயரத்துக்கும் வாட்ட சாட்டத்துக்கும் ஊரில் எத்தனையோ பேர் கிடைத்திருப்பார்கள். ஆனால் அவருக்கு அந்த செவலைப் பசுவின் மேல் நாட்டம் வந்துவிட்டது. அது அவர் பார்க்க வளர்ந்தது. தலை ஈத்துக் கறவை முடிந்து பால் வற்ற ஆரம்பித்து இருந்தது. கன்றுக்குட்டிக் களையும் மாறாமல் பசு மாட்டுக் களையும் திகையாமல் இருந்ததுதான் காரணமோ என்னவோ? சந்தனம் அதன் பின் பக்கமாகப் போய் நின்றதை பேச்சியம்மை பார்த்து விட்டாள். அவளால் நம்பவும் முடியவில்லை. ஆனால் கண்ணுக்கு எதிரே சந்தனம் நிற்கிற நிலையும் தெரிகிறது.
பேச்சியம்மை கீரை ஆய்ந்துகொண்டிருந்த நார்ப் பெட்டியை அங்கேயே போட்டாள். எருக்குழியில் இறங்கி சாணிக் காலோடு ஏறித் தொழுப் பக்கம் வந்தாள். சத்தம் போடாமல் சந்தனத்தின் கையைப் பிடித்தாள். வேட்டியைக் கரண்டை வரை இறக்கிவிட்டாள். இறுக்கி முத்தம் கொடுத்தாள். அவரை இழுத்துக்கொண்டு போய் , விடிந்ததும் விடியாததுமாய், சைலுவின் அப்பா முன்னால் நிறுத்தி, ‘எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வையுங்க அய்யாஎன்றாள். வேறு எதையுமே சொல்லவில்லை.
பெரிய அய்யா என்ன ஏது என்று எதுவுமே கேட்காமல் சந்தனத்தைப் பார்த்தார். மடியில் இருந்து பதினோரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். ‘உள்ளே போயி சாமியைக் கும்பிட்டுட்டுப் போங்கஎன்று கையை உள்ப் பக்கமாகக் காட்டினார். பேச்சியம்மையிடம், ‘அவனை நல்லா பார்த்துக்கோஎன்று சொன்னார். என்ன நினைத்தாரோ, அடுத்த பௌர்ணமிக்கு முன்னால், ஒரு பத்து மரக்கால் விதைப்பாட்டை அவன் பேருக்குக் கிரயம் பண்ணிப் பத்திரத்தைப் பேச்சியம்மை கையில் கொடுத்துவிட்டார். இந்த வேப்ப மரம் நிற்கிறதே அதற்குக் கீழ்ப் பக்க நிலம் அது.
முதலில் லோகாவிடம் இதைச் சொல்ல வேண்டும். இதைச் சொன்னால் நான்கைந்து வருஷம் பிள்ளைகுட்டி இல்லாமல் இருந்து, பேச்சியம்மை கூட வாழ்ந்த வாழ்வைச் சொல்லாமல் முடியாது. அவ்வளவு சந்தோஷமாக ஓடி ஓடி விவசாயம் பார்த்துக் கட்டும் செட்டுமாக இருந்தவள், திடீரென்று ஒருநாள் , இன்றைக்கு வரை இருக்கிறாளா இல்லையா என்று தெரியாத அளவுக்கு, கண் காணாமல் போய்விட்டாள்.  பெரிய அய்யா இறந்து போன தாக்கல் இல்லாமலா போயிருக்கும்? அதற்குக் கூட எட்டிப்பார்க்காமல் இருக்க எப்படி அவளுக்கு முடிந்தது என்பதில் சந்தனத்துக்கு நிறைய வருத்தம். ‘இனிமேல் அந்த மூதி வந்தாலும் சரிதான். வராட்டாலும் சரிதான்என்று தனக்கு ஆகிவிட்டதைச் சொல்ல வேண்டும்.
சைலு அய்யா நொடித்துப் போன வருத்தத்தில் தான் சந்தனம், ‘எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா? என்கிட்டே இருந்தால் மடியிலயா நிலத்தைக் கட்டிக்கிட்டுப் போகப் போறேன்? உங்களுக்கு ஒரு இக்கட்டில் உதவும்னா மகராசனா நீங்களே எடுத்துக்கிடுங்க.என்று பத்திரத்தை சைலு பேருக்குத் திருப்பி எழுதிக் கொடுத்துவிட்டார்.
லோகாவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அந்த அஞ்சுகிராமத்துக்காரி விஷயமாகச் சண்டை வரும்போது கூட, ‘ஊரு உலகத்துல நீரு யாரை ஏமாத்தலை? தலைமுறை தலைமுறையா ஊழியம் பண்ணிக்கிட்டு இருக்கிறவன் சொத்தை மூணாம் பேருக்குத் தெரியாமல், கவுல் கிடையா எழுதி வாங்கிக்கிட்ட மனுஷன் தானே நீரு’  என்று சந்தனம் காதிலும் விழுகிற மாதிரித் திட்டியிருக்கிறாள்.
‘அப்படியெல்லாம் கிடையாது தாயிஎன்று சந்தனம் சொல்வதைக் .கூட,  இப்படிக் கேட்டா இப்படிச் சொல்லணும்னு சொல்லிக் கொடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கிறாரா உங்க அய்யா?; என்று கோபப் பட்டு, ‘நீரு ஒரு கூறுகெட்ட மனுஷன்என்று சந்தனத்தைப் பார்த்துச் சொல்லி அழுதிருக்கிறாள். எதற்கு இப்படிக் கோபப்பட வேண்டும், இப்படி அழவேண்டும் என்று அவருக்கு விளங்கவில்லை.
மடியில், பக்கத்தில் இருக்கிற பூவையெல்லாம் பார்க்கப் பார்க்க, எதற்கு இந்த வேலையை, அந்தச் சின்னப் பென் ஆசைப் பட்டதற்காகச் செய்ய உட்கார்ந்தோம் என்று அவருக்கு இருந்தது. பூ என்றால் என்ன பூ என்று தெரியவேண்டாமா? அதுவே தெரியவில்லை. வாசமாவது அடிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இது ரோஜா என்று தெரிகிறதே தவிர, அரக்குச் சிவப்பில், வெள்ளையில், மஞ்சளில் பூக்கிற ரோஜாச் செடியை இதுவரை அவர் பார்த்ததே கிடையாது. செங்கமாலில் கல் அறுத்தது மாதிரி ஒன்று போல வித்தியாசமே தெரியாமல் குமிழ் குமிழாக இருக்கிற அந்த மஞ்சள் பூவுக்கு லோகா சொன்ன பெயர் வாயில் கூட நுழையவில்லை. எந்த மலங்காட்டில் எந்தக் குளிரில் இப்படியெல்லாம் பூக்கிறதோ? இக்கிணி இக்கிணியாக கருநீலமாக இருக்கிற இதற்கு துளியளவும் வாசம் இல்லை. ஆனால் லட்சணமாக இருக்கிறது. அதைக் கையில் வைத்து, சுழற்றினாற்போலப் பார்க்கையில் ஒரு கொத்து நழுவி சந்தனத்தின் வயிற்றின் மேல் விழுந்தது. ஏதோ இப்போதுதான் அது தன்னுடைய தொப்புளில் முளைத்துப் பூத்தது போல இருந்தது அவருக்கு.
முடிபடர்ந்து மூடிய தன்னுடைய தொப்புள் குழியில் அந்தப் பூங்கொத்தை அப்படியே செருகி, குனிந்து அதைப் பார்த்தபடியே இருந்தார். தானே அந்தப் பூஞ்செடி ஆகிவிட்டது மாதிரியும், அது கொத்துக் கொத்தாக, ஒரு கரு நீலப் படுகையாக பூத்துக் கிடக்கும் தோட்டக் காடாகத் தான் இப்போது இருப்பது போலவும் தன்னுடைய உடலில் அடர்ந்திருந்த முடியை வருடிக் கொடுத்தார். அவருக்கு ஒரு சிறு கணம் பேச்சியம்மை ஞாபகம் வந்தது.
ஃபோனைத் தூக்கிக் காதில் வைத்துக்கொண்டு போன லோகாவை ஆளையே காணோம். மணிக்கணக்காகப் பேசிப் பேசி, பேசின வாக்கில், புதைந்து போகிற தினுசில் கிடக்கும் அந்தக் கருப்பு சோபாவில், ஒரு பூனைகுட்டியாக லோகா  படுத்துத் தூங்கிப் போயிருக்கலாம் இதற்குள்.
இவ்வளவு விளக்குகளையும் யார் அமர்த்துவார்கள்? களைப்பாக இருந்தது. எழுந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. உடலில் இருக்கிற நீர்ச் சத்து பூராவையும் தொப்புளில் வைத்த அந்த சின்னஞ்சிறு கரு நீலப் பூங்கொத்து உறிஞ்சிக் குடித்துவிட்டது. சந்தனத்துக்குத் தாகத்தில் தொண்டை வறண்டது.
கீரிப் பிள்ளைகள் மறுபடி விளையாட வந்துவிட்டதா என்று பார்க்க விரும்பினார். முகத்தைத் திருப்ப முடியவில்லை. கழுத்து நரம்பு விறைத்துக் கொண்டு வலித்தது. கண்ணாடியை எங்கே வைத்தோம் என்பது இடது கையின் துளாவலுக்குக் கிடைக்கவில்லை. எப்போதும் உள்ள அவருடைய வழக்கம் போல, கழுத்தில் கிடந்த துண்டின் இருபக்க முனைகளை இரண்டு கக்கத்துக்குள்ளும் செருகிக்கொண்டார். சுவரில் சாய்ந்திருந்த முதுகைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறக்கினார்.
தரையில் கால் நீட்டிப் படுத்திருக்கிற நிலையில், திராவகம் ஊற்றாகப் பொங்குவது போல ஒரு வலி பீறிட்டு எவ்வி, உள்வாங்கி அடங்குவதாக உடனே குளிர்ந்து உடம்புக்குத் திரும்பியது.
அந்தக் குறைந்த நேரத்துக்குள்ளே அத்தனை பூக்களையும் அள்ளித் தன் மேல் போட்டுக்கொள்ள சந்தனத்திற்கு எப்படி முடிந்தது என்று தெரியவில்லை.
அசையாத நெஞ்சு முடிக்கு மேல் அப்படியே எல்லாம் புரண்டுகொண்டு இருக்க, நீண்ட காம்பு உள்ள ஒன்று மட்டும் யாருக்கோ நீட்டப்பட்டது போல அவருடைய வலது கையில் இருந்தது.

%

உயிர் எழுத்து - நவம்பர்.2013

ஏப்ரல் இதழில் இருந்து, அக்டோபெர் இதழ் தவிர, இந்த இதழ் வரை தொடர்ந்து என்னை எழுதத் தூண்டியும், என் கதைகளைப் பிரசுரம் செய்து ஊக்கியும் நின்ற சுதீர் செந்திலுக்கு என் நன்றி உரித்தாகுகிறது.








No comments:

Post a Comment