Friday 6 September 2013

தாங்கமுடியாத பிற்பகல்

இந்தப் பிற்பகலைத் தாங்கமுடியவில்லை. தொடர்ந்த வெயில் தினங்களின் மொத்தக் கிரணங்களும் குவிந்து ஒற்றைப் புள்ளியில் பொசுக்கிக் கொண்டிருந்தது சற்று முன்பு வரை. இப்போது எங்கோ மழை பெய்கிற வாசம் நெஞ்சை அடைக்கிறது. கதவைத் திறந்து வெளியே போய்ப் பார்த்துவந்துவிட்டேன். ஒரு சொட்டுக் கூட விழவில்லை. அப்புறம் ஏன் நெஞ்சு அடைக்கிறது.
ஜெயமோஹனுடைய புறப்பாடு - ஐந்து முதல் ஒன்பதாம் பகுதிகள் வரை ஒரே மூச்சில் படித்திருக்கக் கூடாது. அதற்கு முன் போகன் சங்கரின் பக்கத்துக்குப் போய் இந்த ஒருவாரத்தில் அவர் பதிவேற்றி இருப்பதை எல்லாம் அடுத்தடுத்த குவளைகளில் வார்த்து அருந்தியிருக்கக் கூடாது. விஷம் எனில் ஒரு துளி போதுமானதாக இருப்பதில்லை. அமுதெனினும் அப்படியே. அப்புறம் நெஞ்சு அடைக்கத்தான் செய்யும்.
இங்கே பெய்யாத மழையை விட, எங்கோ பெய்கிற மழை அதிகம் படுத்துகிறது. நானும்தான் எத்தனை முறைகள் கதவைத் திறந்து வெளியே சென்று பார்ப்பேன். துளிகள் விழத்துவங்கிவிட்டனவா என்று வலது கையை நீட்டிக்கூடப் பார்த்தாயிற்று.
மழைச்சொட்டு இல்லைதான். இரண்டு சொட்டு ஜெயமோஹனும், நான்கு சொட்டு போகன் சங்கரும் கையில் விழுந்து தெறித்திருக்கிறார்கள். திராவகம் விழுந்த மாதிரி பொத்துப் போய் இருக்கிறது. எனக்கு சந்தோஷம்தான்.
9

No comments:

Post a Comment