Monday 19 August 2013

முக நக - 10.









15.
சமீபத்தில் யானைக் கனவுகள் எதுவும் வரவில்லை. செய்தி ஒளிபரப்புகளில் தான் அடிக்கடி யானைகள் அடிவாரங்களுக்கு இறங்குகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் இருபத்தாறு எண்ணிக்கையில் ஒரு யானைக் குடும்பம் விளைநிலங்களின் நடுவில் நிற்பதையே அந்தச் சிறுவன் பார்த்திருக்க வேண்டும். அவன் கனவில் அன்றிரவு எத்தனை யானைகள் வந்தன எனத் தெரியவில்லை. சாமி கும்பிட வந்த இடத்தில் கோவில் யானையைப் பார்த்ததும் அவன் தன்னுடைய கனவில் வந்த யானையை அம்மாவின் முன் பிளிற விடுகிறான்.
அம்மா, யானை வந்து நம்ம வீட்டுக் குளியல் அறையை எல்லாம் உடைச்சுப் போட்டுட்டுதும் மா
இந்த அம்மாக்களே இப்படித்தான்.
கிஷோர். பிள்ளையாரை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
கிஷோர் இன்னும் யானைகளிடமே இருந்தான். பக்கத்தில் தெரியும் கோவில் யானைக்கும் அவனுடைய சொப்பனத்தில் வந்த யானைக்கும் இடையே அவனுடைய கேள்விகளின் வனம் இருந்த்து.
யானையை யாரும்மா முதலில் பார்த்தாங்க?’
யானைக்கு யாரு யானைன்னு பேரு வச்சாங்க?’
இந்த யானைக்கு என்ன பேரு?’
இதோட அம்மா காட்டுல தானே இருப்பாங்க?’
இதைத் தேடிக்கிட்டு இதோட அம்மா வந்தா நம்மை ஒண்ணும் பண்ணாதா?’
யானை செத்து போகுமா?’
யானைக்குப் பக்கத்தில ரெண்டு அக்கா பூக் கட்டிக்கிட்டு இருக்காங்களே அவங்களை ஒண்ணும் பண்ணாதா? அவங்க ஃப்ரண்டா?’
நீங்க யானை மேல போயிருக்கீங்களா?’
தீபாவளிக்கு யானை நம்ம வீட்டில துட்டு வாங்க வந்துதுல்லா. அதையெல்லாம் என்ன பண்ணும்?’
யானைக்கு ஸ்கூல் உண்டா?’
யானை காலை ஏன் தூக்கிக்கிட்டே இருக்கு. புண்ணு இருக்கா?’
ஏன் சங்கிலியில கட்டிப் போட்டிருக்காங்க?’
யானை எங்க குளிக்கும்? நெத்தியில துண்ணூறு எல்லாம் வச்சிருக்கு. அதுவும் சாமி கும்பிடுமா?’
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதிலைக்கூட அவனுடைய அம்மா சொல்லவில்லை.
யானைகள் தண்ணீர் இல்லாமல் மட்டுமா கீழே இறங்குகின்றன? எனக்கு என்னவோ, கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டாலும் இறங்கும் என்று தோன்றுகிறது. கிஷோர் என்று அழைக்கப்படும் அந்த நான்கைந்து வயதுப் பையனைப் பார்த்தால் அந்த 26 யானைக்குடும்பத்தில், அம்மாவின் நான்கு கால்களுக்கு ஊடாக, குட்டைத் துதிக்கையுடன், பால்குடி மாறாத களையுடன் வந்ததே, அந்தக் குட்டி மாதிரி இருக்கிறது.
குட்டி என்றால் என்ன? அதற்கு வேண்டிய குருத்து மூங்கிலை அது வளைத்துக் கொள்ளாமலா போகும்

No comments:

Post a Comment