Wednesday 14 August 2013

முக நக - 5.









10.
மனிதர்கள் சில சமயங்களில் நாயும் பூனையும் ஆகிவிடுகிறார்கள்.
அந்த பேரங்காடி நுழைவுப் பகுதியில் நிற்கிற காவலரும்
கருப்பு இன்னோவா வண்டியைக் குட்டி யானை மாதிரி
அதற்கு முன்னர் நிறுத்திய ஓட்டுநரும் அப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். காவலர் மிகவும் தயவாகவே, ‘கடைக்கு எதிராக நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளி நிறுத்தமட்டுமே சொன்னார். அவர் வயதும் அவருடைய வாழ்வின் தோல் சுருக்கமும் தயவாகப் பேசும்படியே வைத்திருந்தன. ஓட்டுநர் இளவட்டம். ரத்தத்தில் சூடு, வெதுதுப்பு அதிகம். எடுத்த எடுப்பில்,
உங்க அப்பன் வீட்டு இடமா?’ என்றுதான் பேச்சை ஆரம்பித்தார். நான் வேறு ஒரு காரியமாக அந்தப் பக்கம் போனவன். பேரங்காடிக்கு அடுத்த மாடியில் எனக்கு ஒரு வேலை இருந்தது. பேரங்காடி காவலர், என் பக்கம் திரும்பி, ‘பாருங்க. நான் என்ன சொல்லிவிட்டேன். இவ்வளவு கோபப்பட?’ என்று என்னிடம் சொல்கிறார்.
ஆமா. நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன்என்று மாடி ஏறுகிறேன். நாம் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறவர்கள் தானே.
நான் மாடி ஏறும் போது அந்த மணிச்சத்தம் கேட்கிறது. அந்த வடக்கத்திப் பையன் தோளுக்குப் பின்னால் உயர்த்தி இருக்கும் கையில் பலூன்கள் போல பஞ்சு மிட்டாய பாக்கெட்டுகள் கொத்துக் கொத்தாகத் தொங்க,
காவலரிடம்வேண்டுமாஎன்று கேட்கிறான். சின்னப் பிள்ளையா டே, நான்?’ என்று வேண்டாம் என்பதைச் சிரித்துச் சொல்கிறார். நான் மிக அழகாக மினுங்கும் ரோஸ் கலர் பைகளைப் பார்த்தபடி மேலே போகிறேன். ஒரு பத்து நிமிஷத்தில் என் வேலை முடிந்து படியில் இறங்குகிறேன்.
பஞ்சு மிட்டாய் விற்கிற பையன், அந்த இன்னோவா கார் ஒட்டுநர் பக்கம் நிற்கிறான். சண்டை போட்ட முகம் இவனுடையதா என்கிற அளவுக்கு ஓட்டுநர் இருக்கையில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டு, முதலில் ஒரு பஞ்சு மிட்டாய் பையைப் பிய்க்கிறார். மறுபடியும் இன்னொரு பையைப் பிய்கிறார். பிய்க்கும் போது மேலிருந்து கீழ் வரை பஞ்சு மிட்டாய் பைகள் கொடி மாதிரி அசைக்கிறது. ரூபாயைக் கொடுக்கிறான். ஒன்றைத் தான் வைத்துக் கொண்டு, இன்னொரு பஞ்சு மிட்டாய்ப் பையை, அந்த வடக்கத்திப் பையனிடம் , ‘அந்த தாத்தாகிட்டே கொடுத்திருஎன்று பேரங்காடி வாசலில் நிற்கிற காவலரை அடையாளம் காட்டிச் சொல்கிறார்ன். நான் கொடுத்தேன்னு சும்மா சொல்லுஎன்று பேரங்காடி திசையைப் பார்த்துக் கொண்டே சிரிக்கிறார்.
மனிதர்கள் சில சமயங்களில் தாத்தாவும் பேரனும் ஆகிவிடுகிறார்கள்..
 

No comments:

Post a Comment