Saturday 19 January 2013

ஏற்கனவே...



ரொம்ப  நாட்கள் ஆயிற்று என் கவிதைகளைப் பதிவேற்றி.
எந்தக் கவிதையை இதற்கு முன் இந்தப் பக்கத்தில் வைத்திருக்கிறேன்
என்ற தீர்மானமும் இல்லை.

ஏற்கனவே  பார்த்திருக்கிறீர்கள் என்றால், இது மீள் பார்வை.
ஏற்கனவே வாசித்து விட்டிருக்கிறீர்கள்  என்றால் இது மீள் வாசிப்பு.

*

நதிக் கல்.

இதற்கு  மேல்  உருள முடியாது
கல் நதியை விட்டுக் கரையேறிற்று .
இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று.


விடுவித்தல்.

சிலுவை ஒரு அழகான வடிவம்.
குறுக்கும் மறுக்குமான
கிராமத்துத் தெருக்களாக.
ஆணிகளின் உறுதிக்கும்
குறைவில்லை.
அறையப்பட்டவரை அகற்றினால்
விடுவித்துவிடலாம்
சிலுவையை..


*
கல்யாண்ஜி.

3 comments:

  1. நதிக்கல்லாகத் தான் நாமும் இருக்கிறோம். கரையேறுவது எப்பவோ.
    சிலுவைக்கு விடுதலை. கவிதைகளின் அழகைச் சொல்ல எனக்கெல்லாம் தகுதி இல்லை.

    ReplyDelete
  2. மீள் வாசிப்பிலும் அருமை சார்

    ReplyDelete
  3. அறையப் பட்டவரின் ரத்தம் அல்லவா சிலுவையையும் அழகாய் மாற்றியது...
    தங்களின் 'நதிக் கல்' கவிதைக்கு இன்னொரு தலைப்பு சொல்லிப் பார்த்தேன்..'கல்வி'... என்று ! பிடித்துப் போன குழந்தையை அதன் சரியான பேர் சொல்லியா கொஞ்சுகிறோம்..
    உங்களின் 'மீனைப் போல இருக்கிற மீன்' வாங்கி விட்டேன்..அதற்கு ஓர் ஆய்வு மதிப்புரை எழுத ஆசை.. .
    ஆனாலும்..பேராசை,அல்லவா ?!

    ReplyDelete