Tuesday 26 June 2012

மலர்தலினுடையது

விடுவித்தல்..

சிலுவை ஒரு அழகான வடிவம்
குறுக்கும் மறுக்குமான
கிராமத்துத் தெருக்களாக.
ஆணிகளின் உறுதிக்கும்
குறைவில்லை.
அறையப்பட்டவரை அகற்றினால்
விடுவித்துவிடலாம்
சிலுவையை.

இப்போதைக்கு. 

கொழுந்து இலைகளின்
கசப்பு நல்லது.
துளிர்
ஒப்பற்ற தாமிர நிறம் உடையது.
எல்லாம் தெரியும்,
இப்போதைக்கு அது
அசையாது இருக்கிறது
உறைந்த கண்ணீராக
அற்புதப் பிற்பகல் வெயிலில்
என்பது உட்பட.

காலக் கடல். 

விலங்கு எதுவுமில்லை
கை கால்களில்.
போதத்தின் சாயமிழந்த முகத்தில்
வெளிறிய அமைதி.
நுழைந்து நிற்கும் எங்களின்
சலனம் அறியா அறையில்
அழுகும் வெளிச்சத்தின் துர்வாடை.
கிழிந்து பறந்து கிடக்கின்றன
நாட்காட்டியின் தேதிச் சருகுகள்
ப்ராய்லர் தூவிகளாக.
ஃபெப்ருவரி 29ல் இருந்து
ஆகஸ்ட் 22க்கு விரைந்திருந்தது
அவனுடைய பித்தத்தின் விசைப்படகு.
காலத்தின் பெருங்கடல் வழிவிடக்
காத்திருக்கிறோம்.
கதவைத் தட்டித் திறக்கப் போகிற
ஒருவரின் வருகைக்காகவும்.


தன் மலர்வைத் தானே 

முற்றிய கோடையின் வைகறைக்கு
ஒரு மாயக் குளிர்.
இந்த இளவேனில் இரவுக்கு
இப்படி ஒரு வாசனை.
இரவே ஒரு ஒற்றைப்பூவாக
இடைவிடாது மலர்கையில் உண்டாகும்
கொஞ்சம் கொஞ்சமான வாசனை.
அது பூவினுடையது அல்ல.           
மலர்தலினுடையது.
தானறியாது தன்னைத் தானே
திறந்துசெல்லும் வளர்பிறை இரவு
சற்றே ஒரு கணம்
தன்னைக் குனிந்துபார்த்து,
தன் மலர்வைத் தானே
தரிசிக்கும் தருணம்.
மீன்புரளும் மின்னல் நொடியில்
ஒரு குமிழியுடைத்து பச்சைக்குளம்
சிமிழ் திறந்து காட்டும்
நீரின் நிர்மல சுகந்தம் என
அமர மணம் உணரும் அது.
உணர்தல் பொழுதின் சிரசிறங்கும்
இவ்வேளை இரவை நான் நுகர,
இரவும் எனை நுகராதா போகும்?
நுனிமூக்கு மலர்விளிம்பு தொடாது
நுகர்ச்சி ஏது?
இரவு பெரும் வெண்ணிதழுடன்
என்னை மிக நெருங்கி வர,
இரவையும் காணோம்.
என்னையும் காணோம்.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து.








No comments:

Post a Comment