Sunday 20 May 2012

மலைகள்.காம் இணைய இதழ் 2ல் இருந்து.

இன்றைக்கு
--------------------

காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.
*
வீட்டு நடையில்
நின்றுகொண்டிருந்தேன்.
அருகில் வந்து
ஒரு கருப்புக் கன்றுக்குட்டி
அசையாமல் என்னைப் பார்த்தது.
போய்விட்டது.
இது போதும் எனக்கு
இன்றைக்கு.






நீல வட்டத்தின் தடாகம்.
*

தீர்மானித்தபடியே
மழை துவங்கு முன்
அடுக்ககம் வந்துவிட்டாள்.
பொத்தான் அழுத்தி
மின் தூக்கி மேல் நகர்கையில்
ஆட்டோ விலகிச் செல்வதை
கேட்டாள்/பார்த்தாள்.
உப்பரிகைக் கொடியில்
உலர்ந்த ஆடைகளைச் சேகரிக்கையில்
பெரும் துளியிட்டு மழை துவங்கியது.
அவள் செல்லத் தொட்டியில்
பூத்திருந்தது வெண் சங்கு புஷ்பம்.
படுக்கையறையில் குவித்து
ஆடைகளை மடிக்கையில்
ஆளுயரக கண்ணாடி அழைப்பது போல
அந்தரங்கப் பெயரின் உச்சரிப்பு.
முற்றிலும் அகற்றிக் கொள்ளச் சொன்ன
இடவலக் குரலை விரும்பினாள்.
கீழ்ப்படிந்துகொண்டே வந்தவளின் காலடியில்
கழன்றுவிழுந்திருந்தன உள்ளாடைகள்.
கருப்புக் காப்பியா, பச்சைத் தேனீரா
என்பதைத் தீர்மானித்தாள்
மார்புக் காம்புகளில் ஒன்றைத் தொட்டு.
கொதிக்கிற பாத்திரத்தை அகற்றி
சுனையெனப் பொங்கும்
ஜ்வாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
.பழைய பாடல் ஒன்றைப்
பாடிச் சுழலும் போதும்
நீல வட்டத்தின் தடாகத்தில் குதிக்கும்
முன் தீர்மானத்தை எடுக்கவே இல்லை.
நிகழ்வது அனைத்தின் அசாதாரணம் உணர்ந்து
தனிமையின் பதற்றத்துடன் காத்திருந்த
பீங்கான் கோப்பையில்
மின்னலிட்டு நிரம்பத் துவங்கியது
அவள் மேல் பற்றிப் பெய்த
அந்தி மழை.
%
கல்யாண்ஜி

No comments:

Post a Comment